குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த கேப்டன் வருண்சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக விமானப்படை தெரிவித்திருக்கிறது.
கடந்த 8-ஆம் தேதி குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். அதில் 80% தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண்சிங்கிற்கு முதலில் குன்னூர் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் உயர் சிகிச்சைக்காக அவர் பெங்களூரு ராணுவ மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக தற்போது விமானப்படை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.
வருண்சிங் உயிர் பிழைத்திருந்தால் விபத்து குறித்த விசாரணைக்கு உதவியாக இருக்கும் என்று எண்ணியிருந்த நிலையில் இந்த மரணம் தற்போது விசாரணையில் பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய ஒருவர் கூட தப்பிக்கவில்லை என்ற செய்தி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
https://twitter.com/news7tamil/status/1471020321683566596
“கேப்டன் வருண்சிங் மரணச் செய்தி வேதனையளிக்கிறது. நாட்டிற்காக அவர் ஆற்றிய சேவையை ஒருபோதும் மறக்க இயலாது. அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.







