தமிழகத்தில் கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் 5 லட்சம் ரூபாய் வைப்பு நிதியாக செலுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளின் நலன்களை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
அப்போது, கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் பெயரில் தமிழக அரசு சார்பில் 5 லட்சம் ரூபாய் வைப்பு நிதியாக செலுத்தப்படும் எனவும் 18 வயது நிறைவடையும்போது அந்தத் தொகை வட்டியுடன் வழங்கப்படும் எனவும் முடிவெடுக்கப்பட்டது. மேலும் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோய்த் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தாய் அல்லது தந்தைக்கு உடனடி நிவாரணத் தொகையாக ரூ.3 லட்சம் வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
உறவினர் அல்லது பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்பு செலவுக்காக மாதந்தோறும் ரூ3 ஆயிரம் 18 வயது வரை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







