மின்சாரம்,குடிநீர் வழங்காததை கண்டித்து மன்னார்குடி அருகே சவளக்காரன் கிராம மக்கள் சாலை மறியல் ஈடுப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சவளக்காரன்,ராமாபுரம் கிராமங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமங்களில் கடந்த ஒரு மாத காலமாக அடிக்கடி மின் வெட்டு ஏற்படுவதாக கூறப்படுகிறது. இதனால் ஆழ்துளை கிணறு மூலம் இப்பகுதி மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 7 மணி முதல் சவளக்காரன்,ராமாபுரம் கிராமங்களுக்கான மின்சாரம் நிறுத்தப்பட்டது.
மாலை 6 மணி ஆகியும் மின் இணைப்பு வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் ஒன்று திரண்டு சவளக்காரன் கிராமத்தில் மன்னார்குடியில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
அதனால் கிராம மக்கள் மீண்டும் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஒருமணி நேர கழித்து மின் இணைப்பு வழங்கிய பிறகே கிராம மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால் மன்னார்குடி திருவாரூர் சாலையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.







