புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்களில் 95 சதவீதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள அரசு மருந்தகத்தில் மத்திய அரசு வழங்கிய 7 வெண்டிலேட்டர்களை பெற்று சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு இதுவரை 17 வெண்டிலேட்டர்களை வழங்கியுள்ளது.
தற்போது புதுச்சேரியில் 350 வெண்டிலேட்டர்களும், ஆயிரத்து 800 ஆக்சிஜன் படுக்கை வசதிகளும் இருக்கிறது. புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கினலேயே தொற்று பரவல் 50 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது.
தினசரி 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள 95 சதவீதம் பேர் தடுப்பூசி எடுக்காதவர்கள் என்றும், எனவே அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டார்.







