“ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா பயிர்க்கடன்!” – ஓய்எஸ்ஆர் காங். தேர்தல் அறிக்கை வெளியீடு!

பயிர்களுக்கான வட்டியில்லா கடன் வரம்பு ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக அதிகரிக்கப்படும் என்பது உள்பட மக்களை கவரும் பல வாக்குறுதிகளுடன் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.…

பயிர்களுக்கான வட்டியில்லா கடன் வரம்பு ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக அதிகரிக்கப்படும் என்பது உள்பட மக்களை கவரும் பல வாக்குறுதிகளுடன் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,  ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அந்த மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று (ஏப். 27) வெளியிட்டார்.  நிறைவேற்ற முடியாத எந்தவொரு வாக்குறுதியையும் அளிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளார் ஜெகன்.  ’நவரத்னலு’ என்ற பெயரில் கடந்த 2019ஆம் ஆண்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டிருந்த நிலையில்,  அதில் சிறு சிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இம்முறை  ‘நவரத்னலு ப்ளஸ்’ என்ற பெயரில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் முக்கிய வாக்குறுதிகளாக,

  • விவசாயிகளுக்கான வருடாந்திர நிதியுதவியாக வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ. 13500த்திலிருந்து ரூ. 16000 ஆக உயர்த்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பயிர்களுக்கான வட்டியில்லா கடன் வரம்பு ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக அதிகரிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பெண்களுக்கான ‘அம்மா வோடி’ திட்டப் பெண் பயனாளிகளுக்கான ஊக்கத்தொகை ரூ. 15000த்திலிருந்து ரூ. 17000 ஆக உயர்த்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 45 – 60 வயது வரையிலான பெண் பயனாளிகளுக்கான ’ஒய்எஸ்ஆர் சேயுதா’  நிதியுதவித் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ரூ. 3000 ஆக வழங்கப்பட்டு வந்த நல ஓய்வூதியத் தொகை ரூ. 3500 ஆக உயர்த்தி வழங்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆந்திரப்பிரதேசத்தில் அமராவதியை போல,  விசாகப்பட்டினம்,  கர்னூல் ஆகிய நகரங்களையும் சேர்த்து மொத்தம் 3 தலைநகரங்கள் உருவாக்கப்படுமென மீண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.