ஓட்டுக்கு பணம் தருவது, எப்போதுதான் ஒழியும்? என்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்
நடக்கவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. இந்நிலையில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அப்போது, “நடக்க இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. புரட்சிகரமான மாற்றம் வேண்டும் என்றால் நம்முடைய தம்பி தங்கைகள் தயாராக இருக்கவேண்டும். பணம் இருக்கிறவர்கள்தான் இங்கு ஜெயிக்க முடியும் என்றால் இது உழைக்கும் மக்களுக்கான இடமாக இருக்காது. ஓட்டுக்கு பணம் தருவது, எப்போதுதான் ஒழியும்? இதற்காகவா என்னுடைய முன்னோர்கள் கஷ்டப்பட்டார்கள்?” என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், மாற்றம் வேண்டும் மாற்ற வேண்டும் என்பதை வார்த்தையாக இல்லாமல் சொல்லாகவும் செயலாகவும் இருக்க வேண்டும். பணம் வைத்திருப்பவர்கள்தான் அரசியல் செய்ய வேண்டுமென்றால் இந்தியாவை ஜனநாயக நாடு என்று சொல்லக்கூடாது, பணநாயக நாடு என்றுதான் சொல்ல வேண்டும். 50 ஆண்டுகளாக நாட்டை ஆண்டவர்களை பழி கூறாமல் எங்களை மட்டும் பழி கூறுவதில் என்ன அர்த்தம் உள்ளது” என்று பேசினார்.
தொடர்ந்து, “வீடு வீடாகச் சென்று சீமானுக்கு வாக்கு செலுத்த வேண்டாம் அது பாஜகவுக்கு சென்று விடும் என்று பிரச்சாரம் செய்கின்றனர். பாஜக தனித்து நிற்கின்றது. அப்படி இருக்கும் பொழுது நான் எப்படி பாஜக “பி” டீம் ஆக இருப்பேன். இது எந்த மாதிரியான அணுகு முறை” என்று கேள்வி எழுப்பினார்.
நாம் தமிழர் கட்சி தொடர்ந்து தனித்து தான் போட்டியிடுகின்றோம். நாங்கள் தோல்வியுற்றால் அது மக்கள் தோற்றதிற்கு சமம். நாங்கள் வெற்றிபெற்றால்
சுவாசிக்க நல்ல காற்று, குடிக்க நல்ல தண்ணீர், நல்ல சுகாதார சூழல் என்று பல அடிப்படை வசதிகளை செய்வோம் என்று வாக்குறுதியளித்தார். மேலும் பேசிய அவர், “மின்சாரம் இலவசம் என்ற அறிவிப்பு வருகிறது.. ஆனால் தடையில்லா மின்சாரம் வருகிறதா?. என்றும் கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து, “கொரோனா சூழல் காரணமாக தெரு தெருவாக சென்று பரப்புரை செய்ய இயலவில்லை. ஆகவே ஊடகத்தின் வாயிலாக விவசாய சின்னத்தில் வாக்களித்து நாம் தமிழர் பிள்ளைகளை வெற்றி பெற செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் பேசினார்.