முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு உரிய தங்கக் கவசத்தை, தேவர் நினைவாலயம் பொறுப்பாளர்கள் மற்றும் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு அணிவிப்பதற்காக ஜெயலலிதா காலத்தில் அதிமுக சார்பில் தங்க கவசம் செய்து தரப்பட்டது. குரு பூஜையையொட்டி 3 நாட்கள் தேவர் சிலைக்கு தங்க கவசம் பொருத்தப்பட்டு, பின்னர் அந்த கவசம் மதுரை அண்ணா நகரில் உள்ள பாங்க் ஆஃப் இந்தியா வங்கி லாக்கரில் பாதுகாக்கப்படுவது வழக்கம். இதற்காக அதிமுக மற்றும் தேவர் நினைவிட பொறுப்பாளர்கள் சார்பில் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு, அதிமுக கட்சியின் பொருளாளர் பொறுப்பில் அந்த தங்கக் கவசம் வைக்கப்படும்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் அப்போதைய அதிமுகவின் பொருளாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தங்கக் கவசத்தின் காப்பாளராக இருந்தார். அவர் அண்மையில் அதிமுகவில் இருந்தும், பொருளாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். தற்போது அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டு அக்கட்சியின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் இருப்பதால், தங்கள் தரப்பு அதிமுகவிற்கே தங்க கவசத்தை வழங்க உத்தரவிட வேண்டும் என்று வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
அதிமுக சார்பாக அதன் பொருளாளர் சீனிவாசன், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை, நீதிபதி சுவாமிநாதன் முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர் செல்வம் தரப்பில், “கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்று ஓ.பன்னீர்செல்வம் தான் உள்ளார். உச்சநீதிமன்றத்தில் வழக்கு இதுபற்றிய விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தேவர் கவசத்தை வேறு யாரிடமும் வழங்க கூடாது.” என வாதிடப்பட்டது.
தொடர்ந்து அதிமுக சார்பில், “தற்போது அதிமுக கட்சி பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி மற்றும் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் உள்ளனர். எனவே வங்கியில் இருக்கும் கவசத்தை அதிமுக பொருளாளர் மற்றும் தேவர் நினைவாலயம் நிர்வாகிகள் இணைந்து தான் எடுக்க முடியும். திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக பொருளாளர் என அதிமுக கட்சி சம்பத்தப்பட்ட வங்கி கணக்குகளில் மாற்றப்பட்டுள்ளது.” என வாதிடப்பட்டது.
இதனைதொடர்ந்து ஓபிஎஸ் தரப்பில், “அதிமுக விதிகளை மீறி பொதுக்குழு செயற்குழு கூட்டப்பட்டு ஓ.பன்னீர் செல்வம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால் தற்போது வரை ஒரு சில ஆவணங்களில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் உள்ளது. இக்கட்டான நேரங்களில் ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுடன் இருந்ததார். ஜெயலலிதா இருக்கும் போது நம்பிக்கைக்குரியவராக பன்னீர்செல்வம் இருந்தார்.
ஓ.பன்னீர்செல்வம் பொருளாளராக இருந்ததால் அவருக்கு அப்பொறுப்பை கொடுக்கப்பட்டது. ஜெயலலிதா நினைத்திருந்தால் வேறு பொறுப்புகளில் இருப்பவரை இந்த பணிக்கு நியமித்திருக்கலாம்.” இவ்வாறு வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், தேவர் தங்க கவசம் இருக்கும் பாதுகாப்பு பெட்டகத்தை தேவர் நினைவாலய பொறுப்பாளர்கள் மற்றும் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் இணைந்து வங்கியில் எடுக்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.