விலைவாசியைக் கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாட்டில் விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருப்பதால் பொது மக்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 7 மாத திமுக ஆட்சியில் காய்கறிகளின் விலை ஏறிக் கொண்டே செல்கிறது என்றும், இதனால் விவசாயிகள் பெரிதளவில் பயனடையவில்லை எனவும் சுட்டிக்காட்டி உள்ளார். உதாரணமாகத் தக்காளி, முருங்கைக்காய், கத்திரிக்காய் உற்பத்தி செய்யப்படும் இடத்திற்கும், வெளிச் சந்தைக்குமான விலை வித்தியாசம் 3 மடங்கு வரை அதிகரித்துக் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், விலை ஏற்றத்தினால் விவசாயிகளுக்கு பெரும் பலன் கிடைப்பதில்லை என்றும், இடைத்தரகர்கள்தான் அதிகளவில் பயனடைகிறார்கள் எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒரு தொழிலில் ஈடுபட்டிருக்கும் உற்பத்தியாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள் என அனைவரும் சமமாகப் பயனடையவேண்டும் என வலியுறுத்தியுள்ள ஓ. பன்னீர்செல்வம், தற்போதைய விலையேற்றத்தினைக் கருத்தில் கொண்டு காய்கறி சந்தையை முறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.