தமிழகத்தில் வரும் 7-ம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதற்காக மாநகராட்சி பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பழங்கள், காய்கறிகள், முட்டை மற்றும் ரொட்டி ஆகியவை 2 ஆயிரத்து 700 சற்று பெரிய வாகனங்கள், தள்ளு வண்டிகள் மற்றும் டாடா ஏஸ் உள்ளிட்ட 11 ஆயிரம் சிறிய வாகனங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த வாகனங்களின் விவரங்கள் சென்னை மாநகராட்டசி இணையதளத்திலும் நம்ம சென்னை செயலியிலும் பதிவேற்றப்பட்டுள்ளது.
அனைத்து வாகனங்களுக்கும், அவற்றின் விற்பனை மண்டலங்களில் எளிதாக செல்ல பேனர்கள் மற்றும் ஸ்டிக்கர் பாஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும், தங்கள் பகுதியில் வாகனங்கள் இல்லையெனில், இதுதொடர்பான புகார்களை 9499932899, 044-45680200 ஆகிய உதவி எண்கள் மூலம் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
கோயம்பேடு சந்தையில் உள்ள மொத்த விலை மற்றும் சில்லறை விலைகள் மண்டல அதிகாரிகள் மற்றும் மண்டல அமலாக்க குழுக்களுடன் தினமும் பகிரப்படும் என்றும் தற்போதுள்ள விதிமுறைகளின்படி அரிசி, பருப்பு, எண்ணெய் ஆலைகள், கிடங்குகள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சந்தைகளுக்கு சரக்கு வாகனங்கள் தடையின்றி செல்ல அனுமதிக்கப்படும்.
கோயம்பேடு மற்றும் கொத்தவால்சாவடியில் உள்ள மொத்த மளிகை சந்தைகளில் இருந்து விநியோக இடங்கள் , சில்லறை கடைகளுக்கு செல்ல பயன்படும் வாகனங்கள் மாலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை இயக்க அனுமதிக்கப்படும்.
இதற்காக வார்டு அலுவலகங்கள் மற்றும் மண்டல அலுவலகங்களிலேயே இந்த வாகனங்களுக்கு சென்னை மாநகராட்சி பதாகைகள் மற்றும் ஸ்டிக்கர்கள் வழங்கப்படும்.
மளிகைக் கடைகள், பல்பொருள் அங்காடிகள் வீடுகளுக்கே சென்று மளிகை பொருட்களை விற்க காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்படும்.
விநியோகத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு மாநகராட்சி மூலம் பாஸ் மற்றும் ஸ்டிக்கர்கள் வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.




