பாரதியார் நினைவு நாள் மகாகவி நாளாக கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் அறிவித்தமைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மொழிப்பற்று உடையவனே,
நாட்டுப்பற்று உடையவனாய் வாழ இயலும் என மெய்ப்பித்து காட்டியவர் மகாகவி பாரதியார் என்றும், தமிழ் மொழியின் சிறப்புகளையும், உயர்வையும் கூறி இளைஞர்களின் உள்ளங்களில் சிம்மாசனமிட்டு இருப்பவர் பாரதியார் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
பாரதியாரின் நினைவு நாளையொட்டி, 14 அறிவிப்புகள் வெளியிடப்பட்டதற்கு அதிமுக சார்பில் வரவேற்பு அளிப்பதாகக் கூறிய ஓ.பன்னீர் செல்வம், பாரதியின் புகழை சிறப்பிக்கும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.







