கூட்டணியில் யார் இருந்தாலும் இல்லை என்றாலும் வருத்தப்பட போவது இல்லை என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மஹாலில் பாஜக மாவட்ட தலைவர்களுடனான ஆலோசனைக்கூட்டம் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், மாவட்டம் தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாநில அணி பிரிவினர், மாவட்ட பார்வையாளர்கள் உட்பட 221 பேர் கூட்டத்தில் பங்கேற்றனர். மேலும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:
அடுத்த 7 மாத காலத்திற்கு யாருக்கும் ஓய்வு கிடையாது. தீவிரமாக உழைக்க வேண்டும். என் மண் என் மக்கள் நடைபயணத்தின் போது மத்திய அரசுத் திட்டங்களால் பலனடைந்த பயனாளிகளை அழைத்து வந்து பேச வைக்க வேண்டும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை ஒன்றரை கோடி மகளிருக்கு வழங்கும் வகையில் விரிவுபடுத்த வலியுறுத்தி போராட்டங்களை நடத்த வேண்டும்.
அடுத்த 7 மாத காலம் திமுக அரசுக்கு எதிராக தொடர்ந்து போராட்டங்களை நடத்த வேண்டும். பெண்களை அதிகளவில் பூத் கமிட்டிகளில் சேர்க்க வேண்டும், பெண்கள் சென்று வாக்கு சேகரிக்கும்போது கண்டிப்பாக வாக்காளர்கள் வாக்கை மாற்றி போடமாட்டார்கள். ஒவ்வொரு சட்டமன்றத்தில் உள்ள முக்கியஸ்தர்கள் அதாவது கீ ஓட்டர்ஸ் பட்டியலை தயாரிக்க வேண்டும்.
அரசு நடத்தும் கிராம சபை கூட்டம் போல பாஜக சார்பில் வரும் 15 ஆம் தேதி ஒவ்வொரு கிளைகள்தோறும் “கூடுவோம் கூட்டுவோம்” எனும் கூட்டத்தை கூட்டி மக்கள் பிரச்னைகளை கையில் எடுப்போம். கூட்டணி முடிவை டெல்லி தான் முடிவெடுக்கும். என் கருத்தை நான் ஆழமாக தேசிய தலைமையிடம் கூறிவிட்டேன். இனி முடிவு தேசிய தலைமை தான் எடுக்க வேண்டும். இவ்வாறு கூட்டத்தில் அண்ணாமலை பேசினார்.
இதனை அடுத்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அண்ணாமலை பேசியதாவது:
கட்சியை எப்படி பலப்படுத்த வேண்டும், 2024 தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பது பத்திரிகையாளர் சந்திப்பில் விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் இல்லை. இது கட்சி தலைவர்களுடன் உள்ளரங்கில் விவாதிக்கப்பட வேண்டியது. 1998 இல் தேசிய ஜனநாயக கூட்டணி தொடங்கப்பட்டது. அதன் தன்மை வேறுபட்ட காலங்களில் மாறி இருக்கிறது.
பல கட்சிகள் வெளியில் சென்றுள்ளன. பின்னர் பல பரிணாம மாற்றத்துடன் மீண்டும் வந்துள்ளன. மிக பெரிய அளவில் பாராளுமன்ற உறுப்பினர்களை இங்கிருந்து அனுப்பி வைப்போம். பாரதிய ஜனதா கட்சியை பொறுத்தவரை தேசிய ஜனதா ஜனநாயக கூட்டணியை பிரதானப்படுத்தி, 2024 தேர்தலில் மிகப்பெரிய மாற்றங்களை முன்னெடுக்கும்.
2024 தேர்தலில் வெற்றி பெறுபவர்களையும் வாக்கு சதவீதத்தையும் பார்க்கலாம். கூட்டணியில் யார் இருந்தாலும் இல்லை என்றாலும் வருத்தப்பட போவது இல்லை. என்னுடைய ஒரே நோக்கம் பாரதிய ஜனதா கட்சியை வலுப்படுத்துவது. 2024 தேர்தலில் திமுகவிற்கும் பாஜகவிற்கும் தான் போட்டி, மற்ற கட்சிகளுக்கு சக்தி இல்லை.
அந்தந்த கட்சிகள் அந்தந்த கட்சியின் வளர்ச்சியை தான் பார்க்கும். பாரதிய ஜனதா கட்சி அதன் வளர்ச்சியை தான் பார்க்கும். 2024 தேர்தல் பாரத பிரதமர் நரேந்திர மோடி வருவதற்கான தேர்தல். 39-க்கு 39 பாரத பிரதமரிடம் வரும். குற்றச்சாட்டுகள், அவதூறுகள் தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. அது குறித்து பொருட்படுத்துவதில்லை.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
அப்போது குறிக்கிட்ட செய்தியாளர் ஒருவர், அறிஞர் அண்ணா பற்றி நீங்கள் பேசியது சரி என்று சொல்கிறீர்களா என கேட்டதற்கு அது குறித்து பேச விருப்பமில்லை என்றார்.
இதனை தொடர்ந்து அதிமுகவின் வெற்றிக்கு பாஜக தடையாக இருந்ததாக நத்தம் விஸ்வநாதன் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, யார் வளர்ச்சிக்கு யார் தடையாக இருந்தார்கள் என்று யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லலாம். பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது பெரிய கட்சியாக வளர்ந்து இருக்கிறது.
நரேந்திர மோடி மூன்றாவது முறை வரவேண்டும் என்பதற்கான தேர்தல் இது. தேர்தல் முடிவுகள் நிச்சயமாக தேசிய கூட்டணிக்கும் ஆதரவாக இருக்கும். திமுக மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ளது. பாஜக மத்தியில் ஆளுங்கட்சியாக உள்ளது. இந்த இரண்டு கட்சிகளுக்கும் தான் போட்டி. மத்தியில் பத்தாண்டுகளாக ஆளுங்கட்சியாக இருந்தோம் நாங்கள் செய்தததை மக்களிடம் கொண்டு சேர்ப்போம்.
திமுக செய்திருக்க கூடிய சாதனைகளை மக்கள் முன் வைக்கட்டும். நாங்களும் எங்கள் சாதனைகளை முன் வைக்கிறோம். 2024 தேர்தல் திமுக வெர்சஸ் பாஜக தான். பாஜகவின் சண்டை திமுகவோடு. யாருடன் சண்டை போட வேண்டும் என்று தெளிவாக உள்ளோம். பாஜக இன்னும் ஐந்தாண்டுகள் வேண்டுமா என்று மக்கள் முடிவு எடுக்கட்டும். பாரதிய ஜனதா கட்சி அடிப்படையில் பலத்துடன் உள்ளது. 2024 தேர்தல் அதனை உறுதிப்படுத்தும்.
இவ்வாறு பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறினார்.







