ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் மொட்டை கிருஷ்ணனுக்கு பணம் தரவில்லை என இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷா தரப்பிலிருந்து அவரின் வழக்கறிஞர் விளக்கம் அளித்தார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த மாதம் 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் காவல்நிலையத்தில் ஆஜரான கூலிப்படையினர் ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழி வாங்கவே இவரை கொலை செய்ததாக தெரிவித்தனர். ஆனால் போலீசார் தொடர் விசாரணையில் இந்த வழக்கில் மேலும் பல முக்கிய திருப்பங்கள் ஏற்பட்டன.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்ந்து தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே ரவுடி நாகேந்திரன் மகனும் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகியுமான அஸ்வத்தாமனை அண்மையில் போலீசார் கைது செய்தனர். மேலும் பல ரவுடிகள் இந்த கொலையின் பின்னணியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த சூழலில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வேலுர் சிறையில் உள்ள ரவுடி நாகேந்திரனை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் 23 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய திட்டம் தீட்டியதில் ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடிக்கும் தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது.
ஆந்திராவில் உறவினர் வீட்டில் பொற்கொடி பதுங்கியிருந்த நிலையில் போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு இருப்பது தெரிய வந்ததால் ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி 24-வது நபராக கைது செய்யப்பட்டு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை செப். 2-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக பிரபல திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவியிடம் தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்படும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளி மொட்டை கிருஷ்ணன் வெளிநாட்டிற்கு குடும்பத்துடன் தப்பியோடிய நிலையில் அவருக்கு அடைக்கலம் கொடுத்தார்களா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நெல்சனின் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதையும் படியுங்கள் ; “பாலியல் அத்துமீறல்களில் நீதியை வழங்குவதை விட குற்றங்களை மறைப்பதற்கே அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன!” – ராகுல் காந்தி குற்றச்சாட்டு
இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் மொட்டை கிருஷ்ணனுக்கு பணம் தரவில்லை என மோனிஷா தரப்பிலிருந்து அவரின் வழக்கறிஞர் இன்று (ஆக. 21) விளக்கம் அளித்தார். காவல்துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியதாகவும், காவல்துறை விசாரணையில் தன்னால் முடிந்த அனைத்து விவரங்களையும் தெரிவித்ததாகவும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
மொட்டை கிருஷ்ணனுக்கு பணம் கொடுத்ததாக வெளியான செய்தி ஆதாரமற்றவை, தவறானவை எனவும் மோனிஷாவின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்கும் வகையில் பத்திரிகை மற்றும் ஊடகங்களில் பல உண்மைக்கு புறமான செய்திகள் வருவது அதிர்ச்சி அளிப்பதாகவும் வழக்கறிஞர் அளித்துள்ளார். ஆதாரமற்ற தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும், மோனிஷா தொடர்பான தவறான தகவல்களை நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.








