உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய கோயிலில் காணிக்கையாக கிடைத்த ரூ.115 கோடி மதிப்புள்ள 211.546 கிலோ பலமாற்று தங்கம், பாரத ஸ்டேட் வங்கியில் வைப்பு நிதியாக வைக்க, வங்கி அதிகாரியிடம் அமைச்சர் சேகர்பாபு ஒப்படைத்தார்.
தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்கத்தை உருக்கி சுத்த தங்கமாக மாற்றி வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோயிலில் பலமாற்று தங்கத்தை வங்கியில் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன், அறநிலையத்துறை சிறப்பு அலுவலர் குமரகுருபரன், பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இதில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காணிக்கையாக கிடைத்த ரூ.115 கோடி மதிப்புள்ள 211.546 கிலோ மாற்று தங்கம், பாரத ஸ்டேட் பேங்க் வங்கியில் வைப்பு நிதியாக வைக்க வங்கி அதிகாரியிடம் அமைச்சர் சேகர்பாபு ஒப்படைத்தார்.
![](https://i0.wp.com/news7tamil.live/wp-content/uploads/2023/06/postcard-10-2023-06-24T122955.554.jpg?resize=1400%2C787&ssl=1)
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, அறநிலை துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பல மாற்று தங்கம், மும்பையில் உள்ள மத்திய அரசு நிறுவனத்தின் மூலம் சுத்த தங்கமாக உருக்கப்பட்டு வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டு வருகிறது. இதற்காக மூன்று மண்டலங்கள் உருவாக்கப்பட்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் முன்னிலையில் இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக, ஐந்து கோயில்களில் உள்ள தங்கம் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் தங்கத்தை 5 ஆண்டுகளுக்கு வங்கியில் வைப்பு நிதியாக வைப்பதன் மூலம் ரூ.12.50 கோடி வருவாய் கிடைக்கிறது. மேலும், ஐந்து கோயில்களில் உள்ள தங்கத்தை வைப்பு நிதியாக வைப்பதன் மூலம், 5 ஆண்டுகளுக்குச் சுமார் ரூ.25 கோடி கிடைப்பதாக தெரிவித்தார். இந்த வைப்பு நிதியின் மூலம் கிடைக்கக்கூடிய வட்டி பணம் கோவில் வளர்ச்சி மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளுக்குப் பயன்படுத்தப்படும் என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கோயிலில் ஹெச்.சி.எல் நிறுவனம் சார்பில் ரூ.200 கோடி மதிப்பிலும், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சுப்ரமணியசாமி கோவில் சார்பில் ரூ.100 கோடி மதிப்பிலும் நடைபெற்று வரும் பெருந்திட்ட வளாக பணிகள் முப்பது சதவீதம் நிறைவு பெற்றுள்ளது என தெரிவித்தார், அறநிலையத்துறை இடங்களை ஆக்கிரமிப்பு செய்பவர்கள் மீது தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.
சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.