தமிழகத்தில் உள்ள 121 பசு மடங்களில் உள்ள 3 ஆயிரம் கால்நடைகளுக்கு பாதுகாப்பு பெட்டகம் வழங்கப்படும் என்று இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள கோசலையில் கன்று பராமரிப்பு பெட்டகம் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவை இந்து சமய அறநிலையத் துறையும், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழமும் இணைந்து நடத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், அனிதா ராதாகிருஷ்ணன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, “தமிழகத்தில் உள்ள கால்நடைகளை பாதுகாக்க கன்று பாரமரிப்பு பெட்டகம் வழங்கும் திட்டம் உள்ளது. இந்து அறநிலை துறையில் உள்ள 121 கோசலைகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளை பராமரிக்க முதலமைச்சர் ரூ.20 கோடி ஒதுக்கியுள்ளார். நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள பசு மடத்தில் உள்ள கால்நடைகளுக்கு புரதசத்துகள் கொண்ட கன்று பாதுகாப்பு பெட்டகத்தை வழங்கி உள்ளோம். இந்த திட்டம் தமிழகத்தில் உள்ள இந்து அறநிலை துறை கீழ் செயல்ப்படும் 121 பசு மடங்களுக்கும் முழுமையாக செயல்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில், “தமிழக திருக்கோவில்களில் உள்ள பசு கன்றுகளை பாதுகாக்க, ஆரோக்கியமாக வளர பெட்டகம் வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பசு கன்றுகள் பாதுகாக்கப்பட்டால் தான் பசு மாடுகள் உருவாகும். நோய் இல்லாத நிலை உருவாகும்” என்று கூறினார்.







