மதுரையில் 110 ஆண்டுகள் பழமையான கட்டடம் இடிந்து விழுந்ததால் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவலர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார்.
மதுரை விளக்குத்தூண் காவல்நிலைய காவலர்களாக பணியாற்றி வரும் சரவணன் மற்றும் கண்ணன் ஆகிய இருவரும் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் கீழ வெளி வீதியில் உள்ள நடமாடும் தேநீர் கடையில் கூட்டம் அதிகமாக இருந்ததுள்ளது. இதையடுத்து அங்கு சென்ற காவலர்கள் இருவரும் கூட்டத்தை கலைந்து செல்ல அறிவுறுத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த 110 ஆண்டுகால பழமையான கட்டடம் ஒன்று காவலர்கள் மீது இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய காவலர் சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு காவலரான கண்ணனை படுகாயத்துடன் அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற விளக்குத்தூண் காவல் துறையினர் கட்டட உரிமையாளர் இத்ரீஸ் மற்றும் வாடகைத்தாரர் மூன்று பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.







