மர்மநபர் ஒருவர் கொடுத்த தகவலின்பேரில் கடந்த 2017ஆம் ஆண்டு சென்னையில் வருமானவரித்துறையினர் ஷைலி அப்பார்ட்மென்ட்ஸ் என்ற விடுதியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவிற்கு சொந்தமான சொத்து ஆவணங்களை கட்டுகட்டாக எடுத்தனர். அந்த ஆவணங்கள் கொடநாட்டில் கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்களா என்ற கோணத்தில் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை விவகாரங்களை விசாரித்து வரும் தனிப்படை அதிகாரிகள் அவ்விடுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2017 ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் தேதி வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு ஒரு மர்ம போன்கால் வந்தது. சென்னை சி.ஐ.டி நகரிலிருக்கும் ஷைலி அப்பார்ட்மெண்ட்டின் அறை எண் 302-ல் சசிகலா தொடர்புடைய சொத்து ஆவணங்கள் இருப்பதாக ஒருவர் கூறியுள்ளார். இத்தகவலை சென்னையில் உள்ள அதிகாரிகளுக்கு டெல்லிக்கு தகவல் தெரிவிக்கின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதுகுறித்து உடனடியாக விசாரிக்கும்படி தமிழக அதிகாரிகளுக்கு உத்தரவு வருகிறது. அதன் அடிப்படையில் மறுநாள், அதாவது நவம்பர் 18 ஆம் தேதி 302 எண் அறைக்குச் சென்ற மூன்று வருமானவரித்துறை அதிகாரிகள் அங்கிருந்து கத்தை கத்தையாக ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
அந்த அறையிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களில் சசிகலா தரப்பில் ரூ.1,911 கோடி சொத்துக்களை வாங்கியதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் குறித்தும், கடன் பத்திரமும் இருந்துள்ளது.
இதில் மற்றுமொரு அதிர்ச்சி வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு காத்திருந்தது. அந்த அறையை புக் செய்தவர் செபாஸ்டின் என்ற குற்றவாளி, இவர் அப்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவருக்கும் இந்த ஆவணங்களுக்கும் தொடர்பில்லை என விசாரணையில் தெரிய வந்துள்ளது. அப்படியென்றால் அவரது அடையாள அட்டையை பயன்படுத்தி அந்த விடுதியில் அறையை புக் செய்தவர் என்ற அடிப்படையில் கொடநாடு கொலை வழக்கை விசாரிக்கும் தனிப்படை அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
சசிகலாவின் ஆவணங்கள் எப்படி அந்த விடுதிக்கு சென்றன. இதனை சசிகலாவே கொடுத்து வைத்திருக்க வாய்ப்பில்லை என்பதை கொடநாடு கொள்ளை தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சசிகலாவிடம் சென்னையில் நடத்திய விசாரணையில் அதிகாரிகள் ஊர்ஜித்தப்படுத்தியுள்ளனர். அப்படியென்றால் கொடநாட்டில் கொள்ளையடித்த கும்பல் அதனைசென்னை விடுதியில் விட்டு சென்றனரா ? என்ற கோணத்தில் தனிப்படை அதிகாரிகளின் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கின் முக்கிய குற்றவாளியான கனகராஜ், சேலத்திற்கு சென்று சிலரை சந்தித்துள்ளார். அப்போது அவர் கொடநாட்டில் கைப்பற்றிய ஆவணங்களை சேலத்தில் உள்ள சிலரிடம் கொடுத்துள்ளதாக தங்களிடம் கூறியதாக மற்ற குற்றவாளிகள் காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
அந்த நபர் சென்னையில் உள்ள விடுதியில் சசிகலாவின் ஆவணங்களை விட்டு சென்று இருக்கலாம் என தனிப்படை அதிகாரிகள் சந்தேகின்றனர்.
இந்த அடிப்படையில்தான் சென்னை விடுதியில் தனிப்படை டிஎஸ்பி முத்துசாமி தலைமையிலான அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. இதுதொடர்பாக விரைவில் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் விசாரணையை மேற்கொள்ள தனிப்படை அதிகாரிகள் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
இராமானுஜம்.கி