பெண் பார்க்கும் வரன்களை தடுக்கும் ஆசாமிகள் – குமுறல்களை வெளிபடுத்திய இளைஞர்கள்

கன்னியாகுமரி அருகே திருமண வரன்களை தடை செய்யும் ஆசாமிகளை மிரட்டும் வகையில், இளைஞர்கள் ஒட்டிய போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல், குளச்சல் சுற்றுவட்டார பகுதிகளில் இளைஞர்களுக்கு பெண் பார்ப்பதும் பெண்…

கன்னியாகுமரி அருகே திருமண வரன்களை தடை செய்யும் ஆசாமிகளை மிரட்டும் வகையில், இளைஞர்கள் ஒட்டிய போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல், குளச்சல் சுற்றுவட்டார பகுதிகளில் இளைஞர்களுக்கு பெண் பார்ப்பதும் பெண் வீட்டார் விசாரிக்க வரும் போது சில ஆசாமிகள் புறம் பேசி திருமண வரன்களை தடுப்பது தொடர்கதை ஆகி வருகிறது. இதனால் இளைஞர்கள் தங்கள் மனக் குமுறல்களை வெளிப்படுத்தும் விதத்தில் வரன்களை தடுக்கும் நல் உள்ளங்களுக்கு நன்றி, இப்படிக்கு திருமணம் ஆகாத வாலிபர்கள் சங்கம் என்று பேனர் வைப்பதும், போஸ்டர் ஒட்டுவதுமாக இருந்து வந்தனர்.

 

இதனிடையே, கடந்த 2021-ம் ஆண்டு கருங்கல் ஆயினிவிளை பகுதியை சேர்ந்த சில இளைஞர்கள் ஒருபடி மேலே போய் அந்த பகுதியில் பலசரக்கு கடை நடத்தும் நபர் ஒருவரின் புகைப்படத்துடன் போஸ்டர் அடித்து ஒட்டி தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

 

இந்நிலையில், கருங்கல் அடுத்த பாலவிளை பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வரன்களை தடுக்கும் ஆசாமிகள் வீட்டில் உள்ள பெண்களையே வரனாக கேட்கும் விதத்தில் வில்லங்க போஸ்டர் ஒன்றை அடித்து தெருவுக்கு தெரு ஒட்டியுள்ளனர். பயணிகள் நிழல் குடை, குட்டி சுவர் என வரன்களை கொடுக்கும் ஆசாமிகள் அச்சப்படும் அளவுக்கு அவர்களது போஸ்டர் காணப்படுகிறது.


அவர்கள் வைத்துள்ள போஸ்டரில், “திருமண வரன்களை தடை செய்பவர்கள் கவனத்திற்கு” தடை செய்பவர்கள் அவர்களின் மகள் அல்லது மருமகளை திருமணம் செய்து கொடுப்பதாக இருந்தால் மட்டடும் தடை செய்யட்டும் என தெரிவித்துள்ளனர். மேலும் சில நபர்களின் அடையாளம் தெரியும் என்றும் அடுத்த போஸ்டரில் அவர்களின் புகைப்படம் வைக்கப்படும் என்றும் போஸ்டரில் குறிப்பிட்டுள்ளனர்.

 

இந்த வில்லங்க போஸ்டர் விவகாரம் பரபரப்பாக பேசப்படும் நிலையில், கருங்கல் போலீசாரும் இந்த விவகாரம் குறித்து ரகசிய விசாரணையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் மனக்குமுறல்களை வெளிப்படுத்தி போஸ்டர் அடித்த இளைஞர்களும், புறம் பேசி வரன்களை கெடுக்கும் ஆசாமிகளும் விசாரணை வளையத்திற்குள் சிக்கி விடுவோமோ என்ற அச்சத்தில் உறைந்துள்ளனர்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.