சமாதானம் ஏற்பட்டால் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம்: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக “அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் நடத்த வேண்டும்” என மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழர்களின் வீர விளையாட்டுகளில் மிக முக்கியமான…

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக “அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் நடத்த வேண்டும்” என மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் மிக முக்கியமான ஒன்றுதான் ஜல்லிக்கட்டு. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஜல்லிக்கட்டு போட்டியானது வரும் 15-ஆம் தேதி மாட்டுப்பொங்கல் அன்று மதுரை அவினியாபுரத்தில் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு அனைத்து சமூக மக்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டியானது நடத்தப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு (2023) குறிப்பிட்ட சமூகம் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் என அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த முனியசாமி, கல்யாணசுந்தரம் ஆகியோர் ஜல்லிக்கட்டு தொடர்பான மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், கடந்த ஆண்டு அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியானது நீதிமன்ற உத்தரவையடுத்து, அனைத்து சமூகத்தினரையும் இணைத்து குழு அமைத்து நடத்தப்பட்டது. அதேபோல், இந்த ஆண்டும் (2023) தை 1ம் தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு போட்டியை ஒரு சமூகம் மட்டுமே நடத்தாமல், அனைத்து சமூகத்தினரும் இணைந்து நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தனர்.

அதன் அடிப்படையில் இந்த வழக்கானது நீதிபதிகள் கிருஷ்ணகுமார் விஜயகுமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்கென அரசு பல ஏற்பாடுகள் மற்றும் செலவுகளைச் செய்கிறது.

ஜல்லிக்கட்டு போட்டிக்கென நிலையான வழிகாட்டுதல்கள், நடைமுறைகள் உள்ளன.அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கென பல சமூகத்தினரும், அமைப்புகளும் கமிட்டி உருவாக்குகின்றனர்.பல வகை சமாதான கூட்டம் நடத்தியும் இதற்கு தீர்வு கிடைக்கவில்லை. அதனால் மாவட்ட நிர்வாகம் தலைமையில் போட்டியை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

அதற்கு நீதிபதிகள் ஆலோசனை குழுவின் வேலை என்ன, ஒருங்கிணைப்பு குழுவின் வேலை என்ன என கேள்வி எழுப்பினர்.

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்

2022 -ஆம் நீதிமன்ற உத்தரவின் படி ஒருங்கிணைப்புக் குழுவில் அதிகாரிகளும், ஆலோசனைக்குழுவில் கிராமத்தில் உள்ள அனைத்து சமுதாயத்தினரையும் ஒன்றிணைத்து குழு உருவாக்கி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த ஆண்டும் அதே போல் குழு அமைத்து ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், அவனியாபுரத்தின் அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து, நாளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் நடத்த வேண்டும். சமாதான கூட்டத்தில் தீர்வு ஏற்பட்டால் அவனியாபுரம் அனைத்து சமுதாய கிராம மக்கள் இணைந்த ஆலோசனைக்குழுவை உருவாக்கி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம் என உத்தரவிட்டனர்.

அதேபோல் சமாதான கூட்டத்தில் தீர்வு எட்டப்படவில்லை என்றால் ஆதிதிராவிட நலத்துறை இணை இயக்குனரை இணைத்து, மாவட்ட நிர்வாகம் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும். ஒருவேளை மதுரை அவனியாபுரம் அனைத்து சமுதாய மக்கள் இணைந்த ஜல்லிக்கட்டுக்குழு அமையப்பெற்று, ஜல்லிக்கட்டு போட்டியானது நடைபெறும் பட்சத்தில், அங்கு ஏதேனும் சட்ட, ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு, ஜல்லிக்கட்டு போட்டியை தலைமை ஏற்று நடத்த வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.