அதிமுகவின் உட்கட்சி தேர்தல் மூலம் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுப்பதோடு அதற்கான ஒப்புதலை பெற பொதுக்குழுவை கூட்டுவதற்கான பணிகளை எடப்பாடி பழனிசாமி தரப்பு தொடங்கியுள்ளது. நடப்பாண்டில் மட்டும் மூன்றாவது முறையாக கூட உள்ள அதிமுகவின் பொதுக்குழு தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.
அதிமுகவின் செயற்குழு – பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூன் 23 மற்றும் ஜூலை 11 ஆம்
தேதி சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் கடந்த ஜூலை 11ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் ரத்து செய்யப்பட்டு மீண்டும் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது. பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் வரை இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்படுவார் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த பொதுக்குழுவின் தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதைத்தொடர்ந்து நீதிமன்ற வழக்குகள், தேர்தல் ஆணையத்தில் புகார் கடிதங்கள் என எடப்பாடி பழனிசாமி – ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடையேயான பிரச்னை முடிவே இல்லாமல் நீண்டு கொண்டிருக்கின்றன. இந்த பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பொதுச்செயலாளருக்கான உட்கட்சி தேர்தலை விரைவாக நடத்த எடப்பாடி பழனிசாமி தரப்பு முடிவு செய்திருக்கிறது. அதற்கான முதற்கட்ட பணிகளும் தொடங்கி உள்ளன.
உட்கட்சி தேர்தல் மூலமாக இடைக்காலமாக உள்ள எடப்பாடி பழனிசாமி அதிமுகவின்
அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அதிமுகவின் புதிய
பொதுச்செயலாளர் பதவிக்கு ஒப்புதலை பெறுவதற்காக சிறப்பு பொதுக்குழுவையும் கூட்ட அதிமுக தலைமை ஏற்பாடு செய்து வருகிறது. அதே நேரத்தில் பொதுக்குழு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை எதிர்பார்த்து
ஓ.பன்னீர்செல்வம் காத்திருக்கிறது.
தமிழக சட்டப்பேரவை அடுத்தமாதம் கூட உள்ள நிலையில் அதற்கு முன்னதாகவே உட்கட்சி தேர்தல், பொதுச்செயலாளர் தேர்தல், பொதுக்குழு என அனைத்தையும் முடித்து,
எதிர்க்கட்சி தலைவராக மட்டுமல்லாமல் அதிமுக எனும் மாபெரும் இயக்கத்தின்
பொதுச்செயலாளராகவும் சட்டமன்றத்திற்குள் செல்ல எடப்பாடி பழனிசாமி
திட்டமிட்டுள்ளார். அதனை நீதிமன்ற வழக்குகள் மூலம் தடுக்க ஓ.பன்னீர்செல்வம்
முயற்சி செய்கிறார். அதிமுகவின் எதிர்காலத்தை அக்கட்சி தலைவர்களிடம்,
தொண்டர்களிடம் முடிவு செய்த காலத்தை தாண்டி தற்போது நீதிமன்றமும், தேர்தல்
ஆணையமும் தான் முடிவு செய்ய வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது.
விக்னேஷ், நியூஸ் 7 தமிழ், சென்னை