போதைக்கு அடிமையான கல்லூரி மாணவர்களை நல்வழிப்படுத்திய கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத்திற்கு பெற்றோர்கள் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.
இன்றைய இளைய சமுதாயம் போதை பொருட்களுக்கு அடிமையாகி சீரழிந்து வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. போதையில்லா தமிழகம், சிற்பி போன்ற பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளது. அதனடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தமிழக காவல்துறை போதை பொருள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதேபோல் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி வேண்டாம் போதை என்ற தலைப்பில் போதை பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நடத்தியது. இதில் பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிராக உறுதி மொழியேற்று கொண்டனர்.
இந்நிலையில் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாணவர்களை போதை பழக்கத்திலிருந்து மீட்டெடுக்க பல்வேறு முயற்சிகளை கையாண்டு வருகிறார். நாகர்கோவில் பகுதியை சார்ந்த போதை பழக்கத்திற்கு அடிமையான இரு இளைஞர்கள் குறித்த தகவல் காவல்துறை கண்காணிப்பாளருக்கு சென்றுள்ளது.
இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத், அம்மாணவர்களை உடனடியாக கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வரவழைத்து போதை பொருள் குறித்து விழிப்புணர்வு வழங்கினார். தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரண் பிரசாத் மற்றும் மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் முன்னிலையில் அப்பகுதியில் உள்ள போதை பொருள் மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டனர்.
போதைக்கு அடிமையாகி இருந்த மாணவர்களை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்ந்து நல்வழிப்படுத்திய காவல் கண்காணிப்பாளருக்கு அம்மாணவர்களின் பெற்றோர்கள் நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்தனர்.