நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று காரணமாக உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 22 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “கொரோனா தொற்றில் இருந்து குணமடைவோரின் விகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கொரோனா 2ம் அலை தீவிரமடைந்த நிலையில் பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. இரண்டாவது நாளாக தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்துக்கு கீழாக குறைந்துள்ளது.
நேற்று ஒரே நாளில் 20 லட்சத்து 80 ஆயிரத்து 48 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 790 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 84 ஆயிரத்து 601 ஆகவும், கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2 கோடியே 51 லட்சத்து 78 ஆயிரத்து 11 ஆகவும் அதிகரித்துள்ளது.
24 மணி நேரத்தில் 3 ஆயிரத்து 617 கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை, 3 லட்சத்து 22 ஆயிரமாக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டோரின் எண்ணிக்கை 20 கோடியே 89 லட்சமாக உள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.







