சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு – அமைச்சர் செந்தில் பாலாஜி மனு மீது பிப்.15-ம் தேதி தீர்ப்பு!

செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 15-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தெரிவித்துள்ளார். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன்…

செந்தில் பாலாஜி தொடர்ந்த வழக்கின் விசாரணையை பிப்ரவரி 15-ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினா் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். செந்தில் பாலாஜி இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிடப்பட்டு, வழக்கு விசாரணை பிப். 14-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனிடையே, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் (பிப். 7) நிறைவடைந்த நிலையில், புழல் சிறையில் இருந்து காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை பிப். 15-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். இதன் மூலம் 19வது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும், சென்னை மத்திய குற்றப்பிரிவில் பதிவான மூன்று வழக்குகளின் விசாரணை முடியும் வரை அமலாக்கத்துறையின் விசாரணையை ஒத்திவைக்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த விசாரணையை தள்ளி வைக்கக் கோரும் செந்தில் பாலாஜியின் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என அமலாக்கத்துறை கூறியுள்ள நிலையில், செந்தில் பாலாஜியின் மனு மீதான விசாரணை பிப்.15-ல் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.