கிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில், அடுத்த 4 நாட்களுக்கு, குறிப்பாக மேற்கு வங்கம், ஆந்திரா, பீகார், ஒடிசா, சிக்கிம் ஆகிய 5 மாநிலங்களிலும் கடுமையான வெப்ப அலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் இப்போதே 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவாகி வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே கடுமையான வெயில் மக்களை வாட்டி வரும் சூழலில், தற்போது இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதில், அடுத்த நான்கு நாட்களுக்கு கிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக மேற்கு வங்கம், ஆந்திரா, பீகார், ஒடிசா, சிக்கிம் ஆகிய 5 மாநிலங்களிலும் கடுமையான வெப்ப அலை நிலவும் எனவும், இதனால் அதனை கருத்தில் கொண்டு அப்பகுதிகளுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இது தவிர ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகள், ஆந்திராவின் கடலோரப் பகுதிகள் போன்ற இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருக்ககூடும் என்பதால், முடிந்த வரை இப்பகுதிகளில் உள்ள மக்கள் காலை 11
மணி முதல் மாலை 3 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக நாட்டில் உள்ள 36 வானிலை ஆய்வு மையங்களில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாகவும், வரும் நாட்களில் இது இன்னும் அதிகம் பதிவாக வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இதே நேரத்தில் வடமேற்கு இந்தியாவில் குறிப்பாக மேற்கு இமாலயப் பகுதிகளில் அடுத்த நான்கு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை அல்லது மிதமான பரவலான மழை பெய்யக்கூடும் என்றும், இதனால் பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரப் பிரதேசத்தின் சில பகுதிகள், ராஜஸ்தான் ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை அல்லது மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா