புதுக்கோட்டையில் இருந்து இயக்கப்படும் அரசு பேருந்துகள் நடுவழியில் பழுதாகி விடுவதால் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
புதுக்கோட்டையிலிருந்து நமணசமுத்திரம் வழியாக செல்லும் அரசு பேருந்தில் மாணவ, மாணவிகள் உட்பட மொத்தம் 60 க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். அப்போது திடீரென குழிபிறை அருகே சென்ற பொழுது பேருந்து நடுவழியில் பஞ்சராகி நின்றது. அப்பேருந்தில் சக்கரத்தை கழட்டி மாற்றுவதற்கான உபகரணங்களோ வேறு சக்கரமோ இல்லததால் வேறு பேருந்திற்காக பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் ஒரு மணி நேரம் நடுவழியில் நின்றனர்.
பின்னர் ஒரு மணி நேர காத்திருப்பிற்கு பிறகு வேறு பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் தாமதமாக வகுப்பிற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதேபோல் சென்றவாரம் பொன்னமராவதியில் இருந்து பனையபட்டி வழியாக திருமயம் சென்ற பேருந்தும் நடுவழியில் பழுதாகி நின்றதால் அனைவரும் நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது .
எனவே புதுக்கோட்டை அரசு போக்குவரத்து கழக நிர்வாகிகள் பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அனகா காளமேகன்







