இலக்கியத்திற்கும் எழுத்திற்கும் திமுக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என விருதுநகர் மாபெரும் புத்தகத் திருவிழாவைத் தொடங்கி வைத்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
விருதுநகரில் தென்னிந்தியப் புத்தக பதிப்பாளர்கள் வெளியீட்டாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இணைந்து 10 நாட்கள் நடத்தும் புத்தகக் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தலைமையில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ். ஆர் ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் திறந்து வைத்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழகத்தில் பொருட்காட்சி,வீட்டு உபயோக கண்காட்சி போன்றவற்றிற்கு மக்கள் கூட்டம் கூட்டமாகப் புத்தக கண்காட்சிக்கும் வர வேண்டும். அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என தமிழக முதல்வர் நினைத்து ஆணையிட்டதால் தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நடைபெற உள்ள புத்தக கண்காட்சிக்கு விருதுநகர் புத்தகக் கண்காட்சி ஒரு முன்மாதிரியாகத் திகழும் என்றார்.
பல நூற்றாண்டுகளாகப் புத்தகத்திற்குத் தொடர் வெற்றி கிடைத்து வருவதாகவும், தாயின் சேலையில் உள்ள வாசம் தான் நாம் படிக்கும் புத்தகத்திலும் வீசும் என்றும் கலைஞர் ஆட்சியில் தான் பள்ளிகளில் புத்தக பூங்கொத்து திட்டம் கொண்டு வந்ததாகவும் கூறினார்.தமிழ் எழுத்தாளரான கீ.ராவிற்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ததை வைத்து எழுத்தாளர்களை நாம் மதிக்கும் அளவை தெரிந்து கொள்ளலாம் என்றும் இலக்கியத்திற்கும் எழுத்திற்கும் திமுக திமுக அரசு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்றார்.







