இறை நம்பிக்கை உள்ளவர்கள் காசிக்கு ஆன்மிகப் பயணம் – இந்து அறநிலையத்துறை முடிவு

இந்து மதத்தை சேர்ந்த இறை நம்பிக்கை உடைய 200 பேரை ஆன்மிகப்பயணமாக காசிக்கு அழைத்து செல்ல இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.   தமிழ்நாட்டில் இருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அழைத்துச் செல்வதற்காக…

இந்து மதத்தை சேர்ந்த இறை நம்பிக்கை உடைய 200 பேரை ஆன்மிகப்பயணமாக காசிக்கு அழைத்து செல்ல இந்து சமய அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது.

 

தமிழ்நாட்டில் இருந்து காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அழைத்துச் செல்வதற்காக 20 இணை ஆணையர் மண்டலங்களில் இருந்து தலா 10 நபர்கள் என 200 பேரை தேர்ந்தெடுத்து விபரங்களை அனுப்புமாறு இணை ஆணையர்களுக்கு ஆணையர் குமரகுருபரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். காசி அழைத்துச் செல்லப்படுவோர் இந்து மதத்தைச் சேர்ந்தவர் மற்றும் இறை நம்பிக்கை உடையவராக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து மதத்தைச் சேர்ந்தவருக்கான சான்றிதழையும் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 60 வயது முதல் 70 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் எனவும், பத்து நாட்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை உடன் எடுத்து வர வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளும் இந்து சமய அறநிலையத்துறை பிறப்பித்துள்ளது.

ஆன்மிகப் பயணத்தின் போது விலை உயர்ந்த ஆபரணங்களை அணிந்து வரக்கூடாது எனவும், உடன் குழந்தைகளை அழைத்து வரக்கூடாது எனவும் இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனிடையே, தமிழ்நாட்டிற்கும் – காசிக்கும் இடையே உள்ள பழங்கால தொடர்புகளை மீட்டெடுக்கும் வகையில் காசி தமிழ் சங்கமம் என்ற நிகழ்ச்சி நேற்று தொடங்கியுள்ளது.

இந்த நிகழ்ச்சி டிசம்பர் 19ஆம் தேதி வரை காசியில் நடைபெறுகின்றது. இலக்கியம், பழங்கால நூல்கள் ஆன்மிகம், இசை, நடனம், கைத்தறி மற்றும் நவீன கண்டுபிடிப்புகள் போன்ற பல்வேறு அம்சங்களை பற்றிய கருத்தரங்குகள், விவாதங்கள் நடக்கின்றன. இதற்காக பாஜக சார்பில் மாணவர்கள் ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.