அதிமுக பொதுக்குழு வழக்கு தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்!

அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அந்த தீர்ப்பின் முக்கிய சாராம்சங்களை இந்த பதிவில் பார்க்கலாம். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை…

அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. அந்த தீர்ப்பின் முக்கிய சாராம்சங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இருதரப்பு வாதங்களும் கடந்த 22ம் தேதி முடிவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வழக்கில் இன்று காலை நீதிபதி கே.குமரேஷ்பாபு தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பின் முக்கிய சாராம்சங்களை பார்ப்போம்,

  • கட்சி விதிகளில் திருத்தம் செய்ய பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ள போதும், கட்சியின் அடிப்படை கட்டமைப்புக்கு மாறாக திருத்தம் கொண்டு வரப்பட்டதாகவும், எந்த அதிகாரமும் இல்லாமல் ஜூலை 11ல் பொதுக்குழு கூட்டப்பட்டதால் தீர்மானங்கள் அடிப்படை முகாந்திரம் அற்றவை பன்னீர்செல்வம் தரப்பினர் முன் வைத்த வாதங்களை ஏற்க முடியாது.

  • ஜூலை 11 பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், 2,460 உறுப்பினர்களும் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானங்களும் செல்லுபடியாகக் கூடியவையே.
  • பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வந்த தீர்மானமும், இடைக்கால பொதுச்செயலாளர் நியமித்த தீர்மானங்களும் செல்லும்
  • பன்னீர்செல்வம் தரப்பினரின் வாதங்களை ஏற்று தீர்மானங்களுக்கு தடை விதித்தால் மீண்டும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தான் கட்சியை நிர்வகிக்க வேண்டி வரும். இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதால் கட்சி செயல்பாடுகள் முடங்கும் அபாயம் ஏற்படும்.

  • பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கம் செய்த சிறப்பு தீர்மானத்தை பொறுத்தவரை, அதை பிரதான வழக்கில் தான் தீர்மானிக்க முடியும். தற்போதைய நிலையில் ஏழு நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது. இருப்பினும், சிறப்பு தீர்மானத்துக்கு இடைக்கால தடை விதித்தால் அது 1 கோடியே 55 லட்சம் தொண்டர்களை கொண்ட கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும் என்பதால் தடை விதிக்க முடியாது.
  • பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதித்தால், கட்சியை வழி நடத்த தலைவர் இல்லாமல் கட்சி பெரிதும் பாதிக்கப்படும்
  • தீர்மானங்களுக்கும், தேர்தலுக்கும் தடை விதித்தால் ஒன்றரை கோடி உறுப்பினர்களை கொண்ட கட்சிக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்துவதுடன், கட்சியின் செயல்பாட்டையும் பாதிக்கும்.
  • அதனால் தீர்மானங்களுக்கும், தேர்தலுக்கும் தடை விதிக்க வேண்டுமென்ற கோரிக்கை நிராகரிக்கப்படுகின்றன.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.