மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு தினத்தை முன்னிட்டு, எடப்பாடி பழனிசாமி சென்னை மெரினாவில் அமைந்துள்ள நினைவிடத்தில் மலர்தூவி மாரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 36-வது ஆண்டு நினைவு தினம் இன்று. எனவே, அவருடைய நினைவு தினத்தையொட்டிஅரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், மக்கள் என பலரும் மரியாதை செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக டிடிவி தினகரன், மன்சூர் அலிகான் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
அந்த வகையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை மெரினாவில் உள்ள நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செய்தார். இதற்கு முன்னதாக சென்னையில் உள்ள இல்லத்தில் எம்ஜிஆர் உருவப்படத்திற்கு அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பிறகு, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்து இருக்கும் எம்.ஜி.ஆர். நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
மெரினாவிற்கு வரும்போது அவருடன் மாவட்ட செயலாளர்கள், எம்.பி. மற்றும் எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், அதிமுக தலைமைக் கழகச் செயலாளர்கள், உள்ளிட்ட நிர்வாகிகளும் தங்களுடைய மரியாதை மலர் தூவி செலுத்தினர். அதைப்போலவே பொதுமக்கள் பலரும் மரியாதை செலுத்தினர்கள்.
இதனைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் “ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் வீரிய விருட்சத்தின் விலை மதிக்க முடியாத விதை, தமிழ்நாட்டில் இல்லையென்ற சொல்லை இல்லாமல் ஆக்கிட அயராது பாடுபட்ட பாரத ரத்னா, ஏழை எளிய மக்களின் வலிகள் அறிந்து வளர்ச்சி திட்டங்கள் வகுத்த தன்னலமற்ற தனித்தலைவர், சத்துணவு தந்திட்ட சரித்திர நாயகர், என்றும் கோடிக்கணக்கான தமிழக மக்கள் நெஞ்சங்களில் வாழும் மன்னாதிமன்னன் MGR புரட்சித்தலைவர் வகுத்து தந்த பாதையின் வழிநடந்து, அவரின் நினைவு நாளில் அவர்தம் பெரும் புகழைப் போற்றுவோம்” என்று பதிவிட்டுள்ளார்.







