உசிலம்பட்டியில் சுமார் 600 ஆண்டுகள் பழமையான புளிய மரங்களை சாலை விரிவாக்க பணிக்காக வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய சங்கத்தினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை உசிலம்பட்டியில் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த சாலை விரிவாக்க பணிகளுக்காக சாலையோரம் இருந்த சுமார் 27 மரங்களை வெட்ட மதுரை மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் மரங்கள் வெட்டும் பணிகள் துவங்கியுள்ளது.
இந்நிலையில், மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து உசிலம்பட்டி 58 கால்வாய் விவசாய சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க விவசாயிகள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராணி மங்கம்மாள் காலத்தில் வைத்த 600 ஆண்டு பழமையான புளிய மரங்களை வெட்டி அளித்து வருவதாகவும், ஒரு மரம் வெட்டினால் 10 மரங்கள் நட வேண்டும் என்ற நீதிமன்ற உத்தரவை மதிக்கவில்லை எனவும் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும் கடந்த 2015 முதல் 2018 ஆம் ஆண்டு வரை மதுரையிலிருந்து உசிலம்பட்டி வரை சாலை விரிவாக்க பணிக்காக சுமார் 800 மரங்கள் வெட்டப்பட்டு, இது நாள் வரை ஒரு மரம் கூட நட்டு பராமரிப்பு செய்யவில்லை எனவும், இதே போல் இந்த மரங்களை வெட்டினாலும் ஒரு மரம் கூட நட போவது இல்லை என கோசங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலிசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளுடன் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
சௌம்யா.மோ
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.