ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 11 ஆயிரம் வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசு 5 ஆண்டுகளுக்கு கொடுத்த உறுதிமொழியை 2 ஆண்டுகளில் ஏறக்குறைய 80 சதவீதத்திற்கு மேல் நிறைவேற்றியுள்ளது. மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.காங்கிரஸ் ஒரு கொள்கை சார்ந்த அரசியல் இயக்கமாக இருக்கிறோம். எங்களை எதிர்த்து நிற்கும் அதிமுக சஞ்சலத்தில் உள்ளது. அவர்களால் அவர்களுடைய அணியையே ஒழுங்குபடுத்த முடியவில்லை. எனவே சஞ்சலத்தில் உள்ள தன்னம்பிக்கை இல்லாத கட்சியை மக்கள் விரும்பமாட்டார்கள்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நல்லாட்சி மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.
கேஸ் சிலிண்டர் விலையை பிரதமர் மோடி தொடர்ந்து உயர்த்தி வருகிறார். அவரின் பொருளாதார கொள்கை என்ன? இதுகுறித்து அவர் தான் விளக்கம் தர வேண்டும். அதானி தவறு செய்துள்ளளார். அவரது நிறுவனம் தவறு செய்துள்ளது. அவர் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என அவர் கூறினார்.