இலக்கியத்தை ஆய்ந்தறிந்து, கற்றுத் தேர்ந்ததால் எழுந்த திரைப்பட பாடல்கள் நம் கண்ணுக்கு விருந்தாகவும், காதுக்கு இனிய பாடலாகவும் என்றும் நீங்காமல் ஒலிக்கிறது. இலக்கிய நயத்துடன் கூடிய திரைப்பட பாடல்கள் பற்றிய மற்றுமொரு தொகுப்பு இது .
காதலால் கட்டுண்ட இருவரில், காதலி தன்னை பார்க்காமல் செல்வதால் மன நோய் உண்டாவதாக கூறும் காதலன்.. மறுகணம் அவள் தன்னை பார்த்ததால், தனது நோய் போய்விட்டது என கூறுகிறான்… இந்த உணர்வை, “இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு, நோய்நோக்கொன் றந்நோய் மருந்து””.. என்கிறார் திருவள்ளுவர்… மையூட்டப்பட்ட அந்தப்பெண்ணின் கண்களுக்கு இரண்டு நோக்கம் இருப்பது தெரிகிறது. ஒரு நோக்கம் எனக்கு துன்பம் தெரிகிறது. மற்றொன்று அந்தத் துன்பத்திற்கு மருந்து ஆகிறது என விளக்கம் தருகிறார் பேராசிரியர் சாலமன் பாப்பையா. திருவள்ளுவர் கூறிய அந்த வரிகளை ஒற்றை வரியில் ருந்தும் மருந்தும் உன் கண்ணல்லவா என சிவந்த மண் திரைப்படத்தில் வரும் ஒரு ராஜா ராணியிடம் என்ற பாடலில் தருகிறார் கவியரசர் கண்ணதாசன்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
18 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட அபிராமி அந்தாதியில், “குறித்தேன் மனத்தில் நின்கோலம் எல்லாம்; நின் குறிப்பறிந்து மறித்தேன்” அன அன்னை அபிராமியை போற்றுகிறார் அபிராமி பட்டர். இந்த கருத்தை உள்வாங்கிய கவியரசு கண்ணதாசன்… வீர அபிமன்யு திரைப்படத்தில், பார்த்தேன், சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன், அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்..என 87 இடங்களில் தேன் என்ற வார்த்தை இடம் பெறும் வகையில் பாடலை அமைத்தார். தேன் சிந்தும் கவிதைக்கு ஏற்ற ராகத்தைத் தேர்ந்தெடுத்து, மெல்லிய வீணையின் இசையில், இனிக்கும் இசையை தந்திருப்பார் கே.வி. மகாதேவன்.
தமிழைத் தேனோடு கலந்து, உயிரின் உணர்வுகளில் ஊட்டிய கவியரசு கண்ணதாசன் தேன் என பாட்டிசைத்தால், பால் தமிழ்ப்பால் என காதல் ரசம் சொட்ட பாடலை தந்தார் கவிஞர் வாலி. ரகசிய போலீஸ் 115 திரைப்படத்தில் இடம்பெற்ற பால் தமிழ்ப்பால் என்ற பாடலில் இளமையை இன்னும் மெருகேற்றுகிறது.
இலக்கிய நயத்துடன் கூடிய கண்ணுக்கு விருந்தாக, காதுக்கு இனிய பாடலாக ஒலிக்கும் திரைப்பாடல்கள் என்றும் தேன்தான்…சுவைதரும் பால்தான்.