“மோடியை கண்டு திமுகவின் கிளைச் செயலாளர் கூட அஞ்சமாட்டார்” – தேனியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!

”மோடியை கண்டு திமுகவின் கிளைச் செயலாளர் கூட அஞ்சமாட்டார்”  என தேனியில் நடைபெற்ற திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு இளைஞர்…

”மோடியை கண்டு திமுகவின் கிளைச் செயலாளர் கூட அஞ்சமாட்டார்”  என தேனியில் நடைபெற்ற திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேனி மாவட்டத்தில்  சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.  இதன் தொடர்ச்சியாக லோயர் கேம்ப்பில் அமைக்கப்பட்டுள்ள பென்னிகுவிக் மணிமண்டபத்திற்கு சென்று அங்குள்ள  பென்னிகுவிக் சிலைக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் அவர் பேசியதாவது:

பிரதமர் மோடி வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.  அப்படி விமானத்தில் பயணம் மேற்கொள்ளும்போது  விமானி இல்லாமல் கூட செல்லுவார் ஆனால் அதானி இல்லாமல் செல்ல மாட்டார்.  மோடியை கண்டு திமுக அச்சப்படுவதாக பாஜக கூறுகிறது. மோடியைக் கண்டு திமுகவின் கிளை செயலாளர்கள் கூட அஞ்ச மாட்டார்கள்.

திமுக ஆட்சிக்கு வந்தால் கலைஞரின் குடும்பம் தான் வாழ்கிறது என்று பிரதமர் மோடி  விமர்சனம் செய்கிறார்.  தமிழ்நாடு மக்கள் முழுவதுமே கலைஞர் குடும்பம் தான். உழைப்பால் உயர்ந்து உழைப்பின் மூலமே இன்று தமிழ்நாட்டின் முதல்வராக பதவி வைத்து வருபவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பாஜகவின் அழுத்தத்தால் அதிமுக நீட் தேர்வை உள்ளே நுழைத்தது.  தற்போது நீட் தேர்வு எதிர்ப்பில் எங்களுடன் துணை நில்லுங்கள், நீட் தேர்வை ஒழித்தால் அந்த பெருமையை உங்களுக்கே வழங்கி விடுகிறோம்.

இவ்வாறு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.