அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு அழைத்ததாகவும், அதனை தான் ஏற்க மறுத்துவிட்டதாகவும் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பாஜகவில் இருப்பதால், தமிழ்நாடு மீனவர் விவகாரத்தில் அவர் மத்திய அரசுக்கு ஆதரவாக தான் பேசுவார். எல்லை மீறி போகும் கேரள மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது இல்லை. தமிழ்நாட்டு மீனவர்கள் தான் சுட்டுக் கொல்லப்படுகின்றனர். அவர்களது உடமைகள் பறிக்கப்படுகின்றன.
மாநில அரசு பிரமாதமாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறது. ஆனால் கடிதம் எழுதவா, தமிழ்நாட்டு மக்கள் மு.க.ஸ்டாலினை முதலமைச்சர் ஆக்கினார்கள். தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணியை முறித்துக் கொள்ளுமா?
இதையும் படியுங்கள் : ரூ.45,000-ஐ நெருங்கும் தங்கம் விலை – பொதுமக்கள் கடும் அதிருப்தி..!
நடிகர் விஜய் அரசியலுக்கு வருகிறார் என்ற பயத்தினால் தான், ‘லியோ’ படத்திற்கு இத்தனை நெருக்கடி கொடுக்கின்றனர். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை வாங்கியிருந்தால் நெருக்கடியே வந்திருக்காது.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து தான் போட்டியிடப் போகிறது. கூட்டணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார். ஆனால், அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பேசினேன். தமிழ்நாட்டில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன்” என்று கூறினார்.







