தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் இன்று மத்திய – மாநில அரசுகளின் உறவுகள் குறித்த ஆராய அமைக்கப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான உயர்நிலைக் குழு அறிக்கையில் முதல் பகுதியை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார். தொடர்ந்து பேசிய அவர்,
”மத்திய – மாநில அரசுகளின் உறவுகள் குறித்த உயர்நிலைக் குழுவின் அறிக்கையின் முதல் பகுதியை சட்டப்பேரவையில் வைக்க இருக்கிறோம்.
மாநில உரிமைகளை வழங்கும் மத்திய அரசு அமையவில்லை. இருக்கின்ற அதிகாரத்தை வைத்துக் கொண்டுதான் கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், உள்கட்டமைப்பில் முன்னேறி வருகிறோம். நில உரிமை, நிதி உரிமை உள்ளிட்ட கோரிக்கைக்கு இன்னும் கடுமையாக போராடும் சூழல்தான் உள்ளது.
எல்லா அதிகாரங்களையும் கொண்டவையாக மாநில அரசுகளை மாற்றும் வகையில் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வருவதற்கான சட்ட முன்னெடுப்புகளை தொடங்கக் கூடிய நாள் இன்று. அனைத்து அதிகாரங்களையும் தன்வசம் வைத்துள்ள மத்திய அரசு, மாநில அரசுகளை மதிப்பதில்லை.
அனைத்து மாநிலங்களும் சுயாட்சி பெற்றவையாக இருக்க வேண்டும். அனைத்து மாநிலங்களும் இணைந்து நடத்தும் கூட்டாட்சி அரசாக மத்திய அரசு செயல்பட வேண்டும் என்பதுதான் நமது கொள்கை. மாநில சுயாட்சி கொள்கையை அரசியல் எல்லைகளைக் கடந்து அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மாநில சுயாட்சி வேண்டும், மத்தியில் கூட்டாட்சி என்பது இந்திய மக்களின் வாழ்வியல் கோரிக்கை. பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவுக்கு கூட்டாட்சி தான் அடிப்படை. எனவே, இத்தகைய தன்மை கொண்டதாக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும்.
கடந்த 76 ஆண்டுகளில் 106 முறை இந்திய அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. நாம் முயன்றால் மீண்டும் திருத்த முடியும். இந்தியாவை முதிர்ச்சியடைந்த கூட்டாட்சி நாடாக மாற்றும் முயற்சியைத் தொடங்க வேண்டும். அதிகாரமும் வாய்ப்புகளும் ஒரே இடத்தில் குவிந்திருக்கக் கூடாது, பரவலாக வேண்டும்.
கூட்டாட்சி கொண்டதாக இந்திய அரசியலமைப்பை மாற்றுவது மத்திய அரசை பலவீனப்படுத்தாது என்று அறிக்கை கூறுகிறது.
நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையிலும், மக்களவையிலும், இந்த கொள்கைக்கு ஆதரவு தெரிவிக்கும் ஜனநாயக சக்திகள் அதிகமாக இருக்கிறார்கள். எண்ணிக்கையாலும், எண்ணங்களாலும் அதிகமாக இருக்கிறார்கள். நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இந்த அறிக்கை அனுப்பி வைக்கப்படும்” எனத் தெரிவித்தார்.







