தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்சம் 1 கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்த்தனிடம் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்தார்.
கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவிவரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள தி.மு.க., பல்வேறு பணிகளை மேற்கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக 18 முதல் 44 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் செயல்திட்டத்தை தமிழக அரசு துவக்கி உள்ளது. இந்நிலையில் தமிழகத்து குறைந்தபட்சம் 1 கோடி கொரோனா தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனிடம் திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கோரிக்கை விடுத்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுபற்றி வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய அரசு வெறும் 13.85 லட்சம் தடுப்பூசிகளையே ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த ஒதுக்கீடு மிகவும் குறைவானது. எனவே, முதலமைச்சரின் அறிவுரைப்படி தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்த்தனை நேரில் சந்தித்து தமிழ்நாட்டுக்கு உடனடியாக குறைந்தபட்சம் ஒரு கோடி தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய கடிதத்தை அளித்துள்ளார்.
செங்கல்பட்டில் உள்ள எச்.எல்.எல். நிறுவனம் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபடாமல் உள்ளது. இங்கு கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய கூடுதலாக ரூபாய் 300 கோடி முதலீடு செய்ய வேண்டும் என்றும் அதற்கு தேவையான நடவடிக்கைளை மேற்கொள்ளவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன், வயது 18 முதல் 44 வயதுடையோருக்கான ஜூன் ஜூலை மாதத்திற்கான தடுப்பூசிகளின் எண்ணிக்கை, மாதம் ஒன்றுக்கு 11 லட்சத்து 51 ஆயிரத்து 760 ஆக இருக்கும் எனவும் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு ஜூன் மாதத்திற்காக 6 லட்சத்து 55 ஆயிரத்து 330 (ஜூன் மாதம் முதல் 15 நாட்களுக்கு) ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் இதைப்போலவே ஜூன் மாதம் இரண்டு மற்றும் மூன்றாவது வாரங்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் உறுதியளித்தார்.
செங்கல்பட்டில் அமைந்துள்ள எச்.எல்.எல். தடுப்பூசி தயாரிக்கும் தொழிற்சாலையை புனரமைக்கும் பணியை துரிதப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாகவும், விரைவில் நல்ல முடிவினை மத்திய அரசு மேற்கொள்ளும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்,
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.