மதுரையில் நிலத்தகராறு தொடர்பாக விசாரிக்கச் சென்ற போலீசாரின் மூக்கை கடித்து துண்டாக்கிய ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கச்சைக்கட்டியை வசிப்பவர் பிரகாஷ் (30) அவரின் வீடு அருகில் வசிப்பவர் நவநீதகிருஷ்ணன் (37) ராணுவ வீரரான இவருக்கும் பிரகாஷுக்கும் பல நாட்களாகவே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று குடிபோதையில் இருந்த நவநீத கிருஷ்ணன் பிரகாஷுடன் தகராறு செய்துவந்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் உடனடியாக மதுரை காவல் அவசர கட்டுப்பாடு மைய எண்ணிற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து வாடிப்பட்டி போலீஸ் கான்ஸ்டபிள்கள் மணிமாறன் மற்றும் ராஜேந்திரன் நேரில் சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
விசாரணையின் போது ஆத்திரமடைந்த நவநீத கிருஷ்ணன் கான்ஸ்டபிள் மணிமாறனின் மூக்கை ஆத்திரத்தில் கடித்து துண்டாக்கினார். இதனை கண்டு அதிர்ந்து போன ஊர்மக்கள் இருவரையும் விளக்கி விட்டனர். அப்போது மணிமாறனின் இடதுபக்க மூக்கின் நுணி பகுதியை முழுவதுமாக நவநீத கிருஷ்ணன் வெறித்தனமாக கடித்து துண்டாக்கியதை பார்த்த ஊர்மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். படுகாயம் அடைந்த கான்ஸ்டபிள் மணிமாறன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வாடிப்பட்டி போலீசார் நவநீத கிருஷ்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.







