கொரோனா பரவல் கொடுமையாகப் பாதித்து வருகிறது, நாடெங்கும். பாதிக்கப்படுவோரும் உயிரிழப்போர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது நாள்தோறும். இதற்கிடையே கொரோனாவால் தனிமைப்படுத்தப்பட்டுள் ளவர்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். தனிமையே கொடுமை. கொரோனா தனிமை, கொடுமையிலும் கொடுமை என்கிறார்கள், ’பாசிட்டிவ்’ ஆன பலரும்!
இந்நிலையில் கொரோனாவுக்காகத் தனிமைப்படுத்தப்பட்ட மாமியார் ஒருவர், வெறுப்பில் மருமகளை கட்டிப்பிடித்து தொற்றைப் பரப்பிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தெலங்கானா மாநிலம், ராஜண்ணா சிர்சில்லா மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது பெண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சகோதரி, மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சுகாதாரத்துறை அதிகாரிகள் தொற்று எப்படி பரவியது என்பது பற்றி அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அந்தப் பெண் சொன்னதுதான் அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘என் கணவர் டிராக்டர் டிரைவராக ஒடிஷாவில் வேலை பார்க்கிறார். வீட்டில் என் மாமியாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சாப்பாட்டை தனியாக வழங்குகிறோம். பேரக்குழந்தைகளும் அவர் அருகில் செல்வதில்லை. இதனால் வெறுப்பான அவர், அடிக்கடி எங்களிடம் சண்டை போடுவார். ஒரு நாள், ’நான் இங்க தனிமையில செத்துட்டிருக்கேன். நீங்க சந்தோஷமா இருக்கீங்களா?’ என்று கோபமாகக் கேட்டார். பிறகு ஆத்திரத்தில் வேகமாக ஓடிவந்து என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். இதனால் எனக்கும் தொற்றுப் பரவியது. பின்னர் என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர். இதையடுத்து என் சகோதரி வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டேன்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.







