குறவன்-குறத்தி என்ற பெயரில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது – நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் குறவன் – குறத்தி என்ற பெயரில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த இரணியன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார்.…

தமிழ்நாட்டில் குறவன் – குறத்தி என்ற பெயரில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த இரணியன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பொதுநல மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், தமிழகத்தில் 20 லட்சத்திற்கும் மேலாக குறவர் சமூக மக்கள் வாழ்ந்து வருவதாகவும், திருவிழா காலங்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சியில் குறவன் குறத்தி என பெயரிட்டு ஆபாச நடனம் ஆடப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த ஆபாச நடன காட்சிகளை இணையதளத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டு, சமூகத்தின் பெயர் இழிவுபடுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குறவர் சமூகத்தினர் கல்வி, அரசு, தனியார் பணிகளில் பணிபுரியும் இந்த காலகட்டத்தில், குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் இச்செயல் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள அவர்,  இந்த செயல்கள் தொடர்வதால் குறவர் சமூக மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாவதாக குறிப்பிட்டுள்ளார்.

எனவே, இணையதளத்தில் குறவன் – குறத்தி என்ற பெயரில் உள்ள ஆபாச நடனங்களை நீக்க வேண்டும் என்றும், ஆபாச நடனமாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்தவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், குறவன் – குறத்தி என்ற தலைப்பில் ஆபாச நடனத்திற்கு காவல்துறையினர் அனுமதியளிக்க கூடாது என்றும், ஆடல், பாடல் நிகழ்ச்சியில் குறவன் – குறத்தி என்ற தலைப்பில் ஆபாச நடனத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியுள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆடல், பாடல் நிகழ்ச்சியில் எந்த ஒரு சமூகத்தையும், குறிப்பாக பழங்குடியின மக்களை இழிவுபடுத்தும் விதமாக இருக்கக் கூடாது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், குறவன் – குறத்தி என்ற பெயரில் ஆடல் – பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் உத்தரவிட்டனர். மேலும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் குறவர் சமூக மக்களை பாதிக்கும் விதமாகவோ, இழிவுபடுத்தும் விதமாகவோ இருந்தால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

அதேபோல் தமிழ்நாடு சைபர் க்ரைம் காவல்துறையினர் சிறப்பு பிரிவு ஏற்படுத்தி, குறவன்-குறத்தி என்ற பெயரில் ஆபாச நடனங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதை தடுக்கவும், குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக ஆடலும் பாடலும் நிகழ்ச்சி நடைபெற்று அதற்கான ஆதாரங்கள், வீடியோ பதிவுகள் இருக்கும் பட்சத்தில், அதற்கு காரணமானவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.