உதகை அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட 4 மணி நேரத்திற்கு மேலாக ஏராளமானோர் காத்திருந்த நிலையில் திடீரென தடுப்பூசி தீர்ந்துவிட்டதாக தெரிவித்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மருத்துவர்களை முற்றுகையிட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உதகையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் தினந்தோறும் 100 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தபட்டு வருகிறது. அதன் படி இன்று 100 டோஸ் தடுப்பூசி மட்டுமே இருந்தது. ஆனால் தடுப்பூசி போட 200-க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். தடுப்பூசி போட்டுகொள்ள சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்த நிலையில் திடீரென தடுப்பூசி தீர்ந்துவிட்டதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர். அதனை கேட்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் மருத்துவர்களை முற்றுகையிட்டு அவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவமனை ஊழியர்கள் முறையாக டோக்கன் வழங்காமலும், தடுப்பூசி இருப்பு குறித்து தெரிவிக்காமல் தங்களை நீண்ட நேரமாக காத்திருக்க செய்ததாகவும் கூறிய பொதுமக்கள், மருத்துவமனை ஊழியர்கள் தங்களுக்கு தேவையானவர்களுக்கு தடுப்பூசி போடுவதாகவும் பொதுமக்களை அலைகழிப்பதாகவும் குற்றம்சாட்டினர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் வரிசையில் நின்ற அனைவருக்கும் டோக்கன் வழங்கபட்டு நாளை தடுப்பூசி போடபடும் என்று உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் திரும்பி சென்றனர்.







