தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை தெற்கு மாவட்டம் பரங்கிமலை தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்த நாள் விழா மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. அப்போது நடைபெற்ற கருத்தரங்கத்தில் நடிகர்கள் ராஜேஷ், தியாகராஜன், பாண்டியராஜன், ரமேஷ்கண்ணா, தம்பி ராமையா ஆகியோர் கலந்துகொண்டனர். மேலும் விழாவில் கலந்துகொண்ட எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின், விழாவைச் சிறப்பிக்கும் விதமாகத் தையல் மிஷின்கள், இஸ்திரி பெட்டிகள், மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனங்கள் ஆகியவற்றை வழங்கினார்.
பின்பு மேடையில் பேசிய அவர், “இந்தியாவே திமுக தலைவரைப் பாராட்டி வருகிறது. ஆபத்தான கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் படுக்கைகள் இல்லாதபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போர்க்கால நடவடிக்கை எடுத்தார். அதற்குத் துணையாக இருந்தவர் அமைச்சர்மா.சுப்பிரமணியன். கொரோனாவிலிருந்து தப்பிக்க ஒரே வழியாக இருந்த தடுப்பூசியும் தட்டுப்பாட்டு நிலையிலிருந்தபோது 10 மாதங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தி மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும்படி செய்து அசத்தினார். மேலும் இல்லம் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை தொடங்கியது மட்டுமில்லாமல் இந்தியாவிலேயே முதன் முறையாகப் புற்று நோய் சிகிச்சைக்காக ரோபோட்டிக் அறுவை சிகிச்சை முறையை அரசு மருத்துவமனையில் தொடங்கியுள்ளார்” என்று புகழ்ந்து கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “முதலமைச்சர் ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார். பாராளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் தற்போது உள்ளாட்சித் தேர்தல் என மாபெரும் சரித்திர வெற்றி படைத்ததற்குத் தமிழ்நாடு மக்களே காரணம்” என்று கூறி தனது உரையை நிறைவு செய்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.