ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலுக்கு நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க ருத்ராட்ச மணி மாலையை மோசடி செய்ததாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
உலகப் பிரசித்தி பெற்ற ராமேஸ்வரம் ராமநாதசாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் வெளி மாவட்ட மற்றும் மாநிலத்திலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டுச் செல்வது வழக்கமான ஒன்று. கோயிலுக்கு வழிபட வரும் பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு பொருட்களைக் காணிக்கையாகவும் நன்கொடையாகவும் கொடுத்து செல்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி கோவையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்டின் மற்றும் அவரது குடும்பத்தார்கள் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு நேர்த்திக் கடனாகப் பல கோடி மதிப்பிலான தங்க ருத்ராட்ச மணி மாலையை வழங்கியுள்ளனர். இது தற்போது வரை இந்து அறநிலையத்துறை கணக்கில் வராமல் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பழனிகுமாருக்குத் தெரிந்தும் கணக்கில் காட்டப்படாமல் இருந்து வருவது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால் ராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் கிராமத்தைச் சேர்ந்தவரும் பாஜக கட்சியை சேர்ந்தவருமான வழக்கறிஞர் கே.ஜி. கணேஷ், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி ஆலயத்திற்கு நன்கொடையாகக் கொடுக்கப்பட்ட தங்க ருத்ராட்ச மாலையை மீட்க வேண்டும் என்றும் 60 பணியாளர்களை நியமித்ததில் ஊழல் நடந்துள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர்லால் குமாவத்தை நேரடியாகச் சந்தித்து மனு அளித்துள்ளார்.









