ஒருவரை இழிவுபடுத்த வேண்டும் என்ற உள்நோக்கமில்லாமல் சாதி பெயரை கூறி திட்டினால் அது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றமாகாது என ஒடிசா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2017-ம் ஆண்டு ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற ஒரு தகராறில் ஒரு சாதியை சார்ந்தவர் பாதிக்கப்பட்டவரின் சாதி பெயரைக் கூறி அழைத்ததாக புகார் பதிவுசெய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு ஒடிசா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கை விசாரித்த ஒடிசா உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.கே.பட்டாநாயக் தீர்ப்பு ஒன்றை வழங்கினார்.
இந்த தீர்ப்பில் “ஒருவர் எந்த உள்நோக்கமும் இல்லாமல் ஒரு சம்பவத்தின் போது சாதியின் பெயரைச் சொல்லி திட்டினால் அல்லது திடீரென சாதியின் பெயரை உச்சரிப்பதால் மட்டும் அந்த வழக்கை எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்காக பதிவு செய்ய முடியாது. இவை மட்டுமே இந்த வழக்கிற்கு போதுமான ஆதாரமாகாது.
இதனையும் படியுங்கள்: “நம்ம ஸ்கூல் பவுண்டேசன்” – ஒரு நாள் ஊதியத்தை வழங்கிய ஐஏஎஸ் அதிகாரிகள்
எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ள சாதியை சார்ந்தவர்கள் என்ற காரணத்திற்காக பாதிக்கப்பட்டவரை அவமானப்படுத்தினால் அல்லது சாதி பெயரைக் கூறினால் அது குற்ற நடவடிக்கையாக கருதப்படும்” என நீதிபதி ஆர்.கே.பட்டாநாயக் தெரிவித்தார்.

இதனையும் படியுங்கள்: ”மின் வெட்டால் மக்கள் தொகை அதிகரிப்பு”- மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு
இந்த தீர்ப்பில் ஹிதேஷ் வர்மா மற்றும் உத்தரகாண்ட் அரசின் வழக்கின் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டிய நீதிபதி எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அவமானப்படுத்தும் நோக்கம் இல்லாமல் சாதி பெயரை கூறினால் வன்கொடுமை தடுப்பு சட்ட குற்றமில்லை என தீர்ப்பளித்துள்ளார். மேலும் இந்த வழக்கில் யார் பாதிக்கப்பட்டாரோ அவர் நேரடடியாக வழக்கு தொடுக்கவில்லை எனவும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.
– யாழன்







