அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் உருவாக்கப்பட்ட நம்ம ஸ்கூல் பவுண்டேசன் திட்டத்திற்கு ஒரு நாள் ஊதியத்தை வழங்குவதாக ஐஏஎஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தனியார் அமைப்புகள் மற்றும் நபர்களின் பங்களிப்புடன் தமிழ்நாடு அரசும் இணைந்து, அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கு ‘நம்ம ஸ்கூல் பவுண்டேசன்’ என்ற திட்டத்தை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் சென்னையில் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் “எல்லா முன்னேற்றத்தையும் அரசே முழுமையாக செய்வது இயலாத ஒன்று. இதற்கு மக்களும் கைகோர்த்து முன்னேற்றத்திற்கு உதவ வேண்டும்.” என்றார். இந்த நிலையில் முன்னாள் மாணவர்கள் மூலம் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்’ திட்டத்திற்கு ஒரு நாள் ஊதியத்தை வழங்குவதாக IAS அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதனையும் படியுங்கள்: ”மின் வெட்டால் மக்கள் தொகை அதிகரிப்பு”- மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு
அரசுப் பள்ளிகளில் பயின்று, தற்போது பல்வேறு நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவர்கள், தொழிலதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்கள், அரசுப்பள்ளிகளை மேம்படுத்த உதவி செய்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த திட்டத்தை தொடங்கி வைத்த முதல் நாளே 50கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது.
அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து, சுற்றுச்சுவர் அமைத்தல், வர்ணம் பூசுதல், இணையதள வசதி, சுகாதாரமான கழிப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட போன்ற பணிகள் இந்த திட்டத்தில் மூலம் நடைபெற உள்ளன.
– யாழன்







