பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வந்து, நாடு முழுவதும் ஒரே விலைக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வந்த மத்திய அரசு, பெட்ரோலிய பொருட்களை இதுவரை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டு வரவில்லை. பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால், அவற்றின் விலை கணிசமாக குறைந்து, மக்கள் பயனடைவர் எனக்கூறி, சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் கனகராஜ் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனுவில், “மத்திய அரசு ஜிஎஸ்டி சட்டப்படியும், ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரையின்படியும் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்து அறிவிக்கும். ஆனால், மாநில அரசுகள் பெட்ரோல், டீசல் விற்பனைக்கு தனிப்பட்ட முறையில் வரிகள் விதித்து குறிப்பிடத்தக்க வருவாயை பெறுவதால், இப்பொருட்களை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர மத்திய – மாநில அரசுகளுக்கு இடையில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. எனவே, இவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்து மத்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லை.
பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரவும், நாடு முழுவதும் ஒரே விலைக்கு அவற்றை விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 2023ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சகம், பெட்ரோலியத் துறைக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி அமர்வு முன் இன்று (செப். 11)விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் கனகராஜ், “மத்திய அரசு வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தி விட்டு, தற்போது ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்குகிறது. ஆனால், இதனால் ஏற்படும் விலை குறைப்பு பலன்கள் மக்களுக்கு வழங்கப்படவில்லை. எனவே, ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வந்தால் ரூ.100 விற்கப்படும் பெட்ரோல் விலை 60 முதல் 70 ரூபாயாக குறையும். எரிவாயு, பெட்ரோல், டீசல் இல்லாமல் அன்றாட வாழ்வை வாழ முடியாது” என தெரிவித்தார்.
இதற்கு நீதிபதிகள், தமிழ்நாட்டில் ரேஷன், வீட்டுவசதி, எரிவாயு உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகிறது எனவும், டாஸ்மாக் மட்டும் இலவசமாக வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்தனர். மேலும், இது அரசின் கொள்கை முடிவு என்பதால் அரசுக்கு எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “கடந்த 2020-ம் ஆண்டு இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த கேரளா உயர்நீதிமன்றம், கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசு என்ன முடிவெடுத்தது என்பது குறித்து விளக்கமளிக்க அவகாசம் வழங்க வேண்டும்” என கேட்டுக் கொண்டார்.
இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.







