அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து, இந்திய- நேபாள எல்லையோர கிராமங்களில் அரிசி கடத்தல் அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக மாவட்ட காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
”மஹாராஞ்கஞ்சில் லட்சுமிநகர், தூதிபாரி, நிச்லெளல், பர்சா மாலிக், பர்கட்வா, ஃபரேனியா, ஹர்டி லால் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. அவை இந்திய-நேபாள எல்லையையொட்டி உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து நேபாளத்துக்கு அரிசி கடத்தப்படுகிறது. உள்ளூரைச் சேர்ந்த அரிசி கடத்தல்காரர்கள் சார்பாக, அந்த கிராமங்களை சேர்ந்தவர்கள் அரிசியை கடத்திக்கொண்டு, எல்லைப் பகுதிகளில் நேபாள வணிகர்கள் அமைத்துள்ள கிடங்குகளில் சேர்க்கின்றனர்.
வேலை கிடைக்காத இளைஞர்கள் மட்டுமின்றி பெண்கள் மற்றும் முதியவர்களும் அரிசியை கொண்டுபோய் சேர்ப்பவர்களாக உள்ளனர். ஒரு குவிண்டால் அரிசியை கொண்டுபோய் சேர்த்தால், அவர்களுக்கு கடத்தல்காரர்களிடம் இருந்து ரூ.300 கூலியாகக் கிடைக்கிறது. அவர்கள் 10 கிலோ அல்லது அதற்கும் மேற்பட்ட எடைகொண்ட அரிசி மூட்டைகளை கொண்டு செல்கின்றனர்.பெரும்பாலானோர் அதிக வருமானம் ஈட்டும் நோக்கில் அடுத்தடுத்து பலமுறை அரிசி மூட்டைகளை எடுத்துச் செல்கின்றனர். இரவில் காவல் துறை அல்லது எல்லை காவல் படைகளிடம் பிடிபட அதிக வாய்ப்புள்ளதால், அந்த நேரத்தைத் தவிர, பிற நேரங்களில் நடந்து சென்றோ, சிறிய வாகனங்களில் பயணித்தோ அரிசியை கிடங்குகளில் சேர்க்கின்றனர்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த கிராமங்களை சேர்ந்த அரிசி வியாபாரிகள், ”கடந்த ஜூலையில் பாசுமதி அல்லாத பிற அரிசியை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடை விதித்தது. உள்நாட்டில் அரிசி விநியோகத்தை அதிகரிக்கவும், பண்டிகை காலங்களில் அதன் விலையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் தடை விதிக்கப்பட்டது. இந்த நடவடிக்கையால் நேபாளத்தில் ஒரு கிலோ அரிசியின் விலை ரூ.70 வரை அதிகரித்துள்ளது. இதனால் அரிசி கடத்தல் அதிகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளனர்.
கடந்த 4 மாதங்களில் நேபாளத்துக்குக் கடத்தப்பட்ட 111.2 டன்னுக்கும் அதிகமான அரிசியை காவல் துறையும், எல்லை காவல் படையான சஷஸ்திர சீமா பல்லும் பறிமுதல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.