சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எழுந்த நிதி முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டி முன்னாள் துணை வேந்தர் சூரப்பாவுக்கு சட்டசபை பொது கணக்கு தணிக்கை குழு சம்மன் அனுப்பி உள்ளது.
அதிமுக ஆட்சியின் போது அண்ணா பல்கலைக்கழகத்தில் சான்றிதழ் அச்சடிக்கப்படுவது டிஜிட்டல் மயமாக்கப்பட்டத்தில் முறைகேடு நடந்ததாக சி.ஏ.ஜி அறிக்கையில் கண்டறியப்பட்டது. இதுகுறித்து சட்டப்பேரவையின் கணக்கு தணிக்கை குழு நடத்திய விசாரணையில் முறைகேடு குறித்து விரிவாக விசாரிக்க தனியாக ஒரு துணைக் குழு அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அந்த குழுவின் கூட்டம் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இன்று நடைபெற்றது.சட்டப்பேரவை கணக்கு தணிக்கை குழு தலைவரும் காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவருமான செல்வப்பெருந்தகை, திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி தலைமையில் நடைபெற்ற குழு கூட்டத்தில் 2016-17 காலகட்டத்தில் அண்ணா பல்கலையில் பணியாற்றிய துணைவேந்தர், துணைவேந்தர் பொறுப்புக் குழு அதிகாரிகள், சுமார் 6 ஐஏஎஸ் அதிகாரிகள், முன்னாள் பேராசிரியர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரிகள் நேரில் வந்து விளக்கம் அளித்தனர்.
மேலும் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா உள்ளிட்ட பேராசிரியர்களுக்கு விசாரணை கமிட்டி முன் ஆஜராக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்னும் 3-4 முறை கூட்டம் கூடவுள்ளதாகவும், எவ்வாறு விதிமீறல் நடைபெற்றது, யார் உடந்தையாக இருந்தார்கள் என்பது குறித்து விரிவான விசாரிக்கப்பட்டு அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படுமென தணிக்கை துணை குழு தகவல் தெரிவித்துள்ளது.







