நெல்லையப்பர் காந்திமதி அம்மாள் கோயிலில் ஐப்பசி திருகல்யாண திருவிழா கோலாகலம்!

திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மாள் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆயிரம் கால் மண்டபத்தில் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.   நாயன்மாா்களால் பாடப் பெற்ற பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை மாவட்டம்,  நெல்லையப்பர்…

திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மாள் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆயிரம் கால் மண்டபத்தில் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.  

நாயன்மாா்களால் பாடப் பெற்ற பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான நெல்லை
மாவட்டம்,  நெல்லையப்பர் காந்திமதி அம்மாள் திருக்கோயிலில் நடைபெறும்
திருவிழாக்களில் சுவாமிக்கு ஆனித்தேரோட்டமும்,  அம்பாளுக்கு ஐப்பசி திருகல்யாண
திருவிழாவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

இந்த ஆண்டு ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 29ம் தேதி அம்மன் சன்னதி கொடிமரத்தில் கொடிஏற்றத்துடன் தொடங்கியது. கடந்த 10 தினங்கள் தினமும் காலை, மாலை காந்திமதி அம்பாளுக்கு அபிஷேகமும், பல்வேறு அலங்காரங்களில் பல்வேறு வாகனங்களில் வீதி புறப்பாடுமும் நடைபெற்றது. நேற்று பிற்பகல் கம்பாநதி காட்சி மண்டபத்தில் சுவாமி அம்பாளுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து இன்று அதிகாலை 4.00 மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமி அம்பாள் திருக்கல்யாண வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.  இதற்காக நெல்லை கோவிந்தராஜா் நெல்லையப்பரை ஆயிரங்கால் திருமண மண்டபத்திற்கு அழைத்து வந்தனர்.   மண்டப வாயிலில் நெல்லையப்பருக்கு பாதபூஜை நடைபெற்றுது.  விழா
மண்டபத்தில் அக்னி பிரதிஷ்டை செய்து ஹோமங்கள் நடைபெற்றன.

தொடா்ந்து சுவாமி அம்பாள் காப்பு கட்டும் நிகழ்ச்சி, மாலை மாற்றும் வைபவம்,
பாலும், பழமும் கொடுத்தல் என சடங்குகள் நடைபெற்றன.   சுவாமி நெல்லைப்பருக்கு
காந்திமதி அம்பாளை தாரைவார்த்துக்கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  சுவாமி,
அம்பாள் ஆகியோருக்கு புது வஸ்திரங்கள் அணிவித்த பின் திருமாங்கல்யதாரண
நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது. தொடா்ந்து சப்தபதி போன்றவை நடைபெற்று வேதியா்கள் மந்திரங்கள் ஓத, ஓதுவாமூா்த்திகள் திராவிட வேதம் பாட மகா தீபாராதனை நடைபெற்றது.  இந்த விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் .

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.