சிவில் சர்வீஸ் தேர்வுகளை 22 மாநில மொழிகளிலும் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

ஐஏஎஸ்., ஐபிஎஸ்., போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளை 22 மாநில மொழிகளிலும் நடத்த உத்தரவிடக் கோரி மதுரையை சேர்ந்த பாலமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான…

ஐஏஎஸ்., ஐபிஎஸ்., போன்ற சிவில் சர்வீசஸ் தேர்வுகளை 22 மாநில மொழிகளிலும் நடத்த உத்தரவிடக் கோரி மதுரையை சேர்ந்த பாலமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட 24 விதமான உயர் பதவிகளுக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் குடிமைப் பணி தேர்வுகள் (சிவில் சர்வீஸ்) நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக முதல்நிலை, முதன்மை, நேர்காணல் என மொத்தம் 3 கட்டங்களாக தேர்வுகள் நடைபெறும்.  இதில் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்களை வைத்து இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.

நடந்துமுடிந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் உட்பட சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலைத் தேர்வு நாடு முழுவதும் 73 நகரங்களில் கடந்த மே மாதம்  நடைபெற்றது.  இத்தேர்வை எழுத நாடு முழுவதும் 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 50 ஆயிரம் பேர் வரை பதிவு செய்து தேர்வில் கலந்துகொண்டனர். 

இந்த சிவில் சர்வீசஸ் தேர்வுகளின் வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே வழங்கப்படும். பொதுவாக இதுபோன்ற தேர்வுகளில் வெற்றியடைய தேர்வர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் குறிப்பிட்ட கேள்விகளுக்கு விடையளிப்பது போன்ற காலநிர்ணயம் மிக அவசியம்.  குறிப்பிட்ட நேரத்துக்குள் அணுகுவதற்கு ஆங்கிலம் அல்லது ஹிந்தி சரளமாக அறிந்திருப்பது அவசியமாகிறது.  இது இந்தி தெரியாத பிராந்திய மொழி மாணவர்களுக்கும் ஹிந்தி தெரிந்த மாணவர்களுக்கும் பாகுபாட்டை ஏற்படுத்தும் முறையாக அமைவதாக ஒவ்வொரு தேர்விலும் தேர்வு எழுதுபவர்கள் குறையாக கூறுவது வழக்கம்.

இந்நிலையில் வினாத்தாள்கள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே கேள்விகள் இடம்பெற்றுள்ளதாக மதுரையைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.  அரசியல் சாசனத்தின் எட்டாவது பட்டியலில் உள்ள அனைத்து மொழிகளிலும் தேர்வு நடத்தாததால்,  ஹிந்தி மாநில மொழியாக இல்லாத மற்ற மாநில மொழிகளில் புலமை பெற்றவர்களுக்கு பாரபட்சமாக உள்ளதுடன், வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு மறுக்கப்படுகிறது என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே சிவில் சர்வீஸ் தேர்வுகளை 22 மாநில மொழிகளிலும் நடத்த உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாலமுருகன் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.