திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் யாகசாலை பூஜையுடன் கந்தசஷ்டி திருவிழா இன்று தொடங்கியது.
முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி விழா வெகு விமர்சையுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதனடிப்படையில், நடப்பாண்டுக்கான கந்தசஷ்டி விழா இன்று காலை 7.35 மணிக்கு யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. ஏழு நாட்கள் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழாவில், கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் சூரசம்ஹாரம் மற்றும் திருக்கல்யாண நிகழ்ச்சியில் பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்வதற்காக தற்காலிக காத்திருப்பு கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. சூரசம்ஹார விழாவை முன்னிட்டு, வரும் 9-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.







