ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் எதற்கு? – டெல்லி நீதிமன்றம் கேள்வி!

போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்தது ஏன் என டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப்…

போதை பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்தது ஏன் என டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

டெல்லியில் கடந்த மாதம் ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்திய 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,  இந்த கடத்தலில் திரைப்பட தயாரிப்பாளரும், திமுக முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக் முக்கிய பங்காற்றியது தெரியவந்தது. இதையடுத்து, ஜாபர் சாதிக்கை போதைப் பொருள் தடுப்புத் துறையினர் (என்சிபி) மார்ச் 9-ம் தேதி டெல்லியில் கைது செய்தனர்.

தொடர்ந்து, ஜாபக் சாதிக்கின் கூட்டாளிகளான சதா, முகேஷ், முஜிபுர் ரகுமான், அசோக் குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் இயக்குநர் அமீர் உள்ளிட்ட 3 பேருக்கு என்சிபி அதிகாரிகள் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பிய நிலையில், ஏப். 2-ம் தேதி இயக்குநர் அமீர் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இதனிடையே கடந்த ஏப். 2-ம் தேதி ஜாபர் சாதிக், சதா, முகேஷ், முஜிபுர் ரகுமான், அசோக் குமார் ஆகியோரின் நீதிமன்றக் காவல் நிறைவடைந்த நிலையில், டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜாபர் சாதிக் உள்பட 5 பேரின் நீதிமன்ற காவலை ஏப்ரல் 16-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

இதனிடையே சென்னை மயிலாப்பூரில் உள்ள ஜாபா் சாதிக் வீட்டில் சோதனை மேற்கொண்ட அதிகாரிகள் பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்ததோடு வீட்டிற்கும் சீல் வைத்தனர். தொடர்ந்து, வீட்டிக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரி ஜாபர் சாதிக் தரப்பில் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு நீதிமன்றத்தில் இன்று (ஏப். 5) விசாரணைக்கு வந்தது. அப்போது ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்தது ஏன்? என மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு சீல் வைத்த வீட்டை பயன்படுத்துவதில் எவ்வித ஆட்சேனை இல்லை என மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சீல் வைக்கப்பட்டுள்ள வீட்டை ஜாபர் சாதிக் குடும்பத்தினர் பயன்படுத்த நீதிமன்றம் அனுமதி வழங்கி வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.